20ம் தேதி முதல் நாடு முழுவதும் லாரிகள் வேலை நிறுத்தம்
டெல்லி: டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 10 குறைக்கக் கோரி மத்திய அரசுடன் லாரி உரிமையாளர்கள் சங்கம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து வரும் 20ம் தேதி முதல் நாடு முழுவதும் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன.
இதனால் இந்தியா முழுவதும் சுமார் 50 லட்சம் லாரிகள் ஓடாது என்பதால் நாடே ஸ்தம்பிக்கும் நிலை உருவாகவுள்ளது.
சமீபத்தில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாயும் குறைக்கப்பட்டது. ஆனால், பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 20 வரையும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 10 வரையும் குறைக்க முடியும். ஆனால், அதைச் செய்ய மத்திய அரசு தயாராக இல்லை.
இதையடுத்து லாரி உரிமையாளர்களின் அகில இந்திய சங்கம் (மோட்டார் காங்கிரஸ்) டீசல் விலையை லிட்டருக்கு மேலும் 10 ரூபாய் குறைக்கக் கோரியும், வாட் வரியை நாடு முழுவதும் ஒரே சீராக விதிக்கக் கோரியும் சேவை வரியை நீக்கக் கோரியும் மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சக செயலாளர் பிரம்ம தத்துடன் பேச்சு நடத்தியது.
இதைத் தொடர்ந்து, மத்திய பெட்ரோலிய அமைச்சக செயலாளர் பாண்டேயுடன் சங்க பிரதிநிதிகள் பேசினர். டீசல் விலையை லிட்டருக்கு மேலும் 2 ரூபாய் மட்டுமே குறைப்பது பற்றி அரசு பரிசீலித்து வருவதாக, பாண்டே தெரிவித்தார். இதை லாரி உரிமையாளர்கள் ஏற்காததால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சரண்சிங், டீசல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் குறைப்பது உள்ளிட்ட சங்கத்தின் 3 கோரிக்கைகளை ஏற்காவிட்டால், வரும் 20ம் தேதி முதல் திட்டமிட்டபடி நாடு தழுவிய லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கும் என்றும், காலவரையற்ற இந்தப் போராட்டத்தில் 50 லட்சம் லாரிகள் பங்கேற்கும் என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications