நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம் - அஞ்சலிக்கு வராத எம்.பிக்கள்
டெல்லி: நாடாளுமன்றத்தை தீவிரவாதிகள் தாக்கியதன் 7வது ஆண்டு தினத்தையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் 10க்கும் குறைவான எம்.பிக்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்றத்தின் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்புப் படையினர் 6 பேர் கொல்லப்பட்டனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தின் 7வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ஆறு பாதுகாப்புப் படையினரின் படங்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில், இரு அவைகளையும் சேர்ந்த 10க்கும் குறைவான எம்.பிக்களே கலந்து கொண்டது அனைவரையும் அதிர வைத்தது.
சில தினங்களுக்கு முன்புதான் மும்பை சம்பவம் குறித்து எம்.பிக்கள் அனல் பறக்க விவாதம் செய்தனர் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு விழாவை பெரும்பாலான எம்.பிக்கள் புறக்கணித்தது அவர்களின் சுய ரூபத்தை தோலுரித்துக் காட்டும் வகையில் அமைந்தது.












Click it and Unblock the Notifications