இன்போசிஸின் 'சிங்கிள் டிஜிட்' ஊதிய உயர்வு!

ஐடி நிறுவனங்கள் வழக்கமாக இரட்டை இலக்கத்தில்தான் அதாவது 13 - 15 சதவீதத்திலான ஊதிய உயர்வை வழங்குவது வழக்கம். ஆனால் தற்போது பொருளாதார நெருக்கடி தலை விரித்தாடி வருவதால் சிங்கிள் டிஜிட் உயர்வுக்கு ஐடி நிறுவனங்கள் மாறியுள்ளன.
டிசிஎஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்கள் இந்த ஒற்றை இலக்க ஊதிய உயர்வு முறையை முதலில் அறிவித்தன. ஊதிய உயர்வைத் தள்ளிப் போட வேண்டும் அல்லது 7-8 சதவீத ஊதிய உயர்வை மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம் என்று அந்த நிறுவனங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் இன்போசிஸும் இந்த ஒற்றை இலக்க உயர்வுக்கு மாறியுள்ளது. அடுத்த நிதியாண்டில், ஊழியர்களுக்கு ஒற்றை இலக்கத்திலான ஊதிய உயர்வை அமல்படுத்தப் போவதாக அது அறிவித்துள்ளது.
இதுகுறித்து இன்போசிஸ் நிறுவனத்தின் மூத்த மேலாளர் சந்தீப் மஹீந்த்ரூ கூறுகையில், வரும் நிதியாண்டில் ஊதிய உயர்வு விகிதம் குறைவாகவே இருக்கும். ஒற்றை இலக்கத்தில்தான் அது இருக்கும். அதிலும் அதிகபட்ச ஒற்றை இலக்க உயர்வாகவும் இருக்கலாம் அல்லது குறைந்தபட்ச ஒற்றை இலக்க உயர்வாகவும் இருக்கலாம். அதை உறுதியாக கூற முடியாது.
வரும் நிதியாண்டில் ஊதிய உயர்வு தொடர்பான பிரச்சினை பெரிதாக இருக்கும் என்றார் அவர்.
இதற்கிடையே, டிசிஎஸ் நிறுவனம் அடுத்த நிதியாண்டில் ஊதிய உயர்வை மேற்கொள்ளாது என்று கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாகவே ஐடி நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை அனுபவித்து வருகின்றன. காரணம், பல வாடிக்கையாளர்கள் புதிய ஐடி புராஜக்ட்களை நிறுத்தி வைத்துள்ளன. அவுட்சோர்சிங்கையும் தாமதப்படுத்தியுள்ளன. இதனால்தான் இந்த நிலை.












Click it and Unblock the Notifications