ஐயப்ப பக்தர்கள் வேடத்தில் மது கடத்தல்
சேலம்: சேலம் அருகே ஐயப்ப பக்தர்கள் வேடத்தில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள மதுவைக் கடத்திய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள தேவியாக்குறிச்சி ரயில்வே கேட்டில் போலீசார் நின்று கொண்டு அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அய்யப்பன் படத்துடன் ஒரு கார் வந்தது.
அந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது அதில் 2 ஐயப்ப பக்தர்கள் இருந்தனர். காருக்குள் சோதனை போட்டபோது, பெட்டி, பெட்டியாக மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது.
அந்த பெட்டிகளில் இருந்த 1,000 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். இந்த காரில் இருந்த நம்பர் பிளேட்டும் போலியானது என்பது தெரியவந்தது.
அந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
காரில் இருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள்,
கார் டிரைவர் ரங்கநாதன் (27), கார் உரிமையாளர் பிரகாஷ் (37) ஆகியோர் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள்.
இன்னொருவரான சசிக்குமார் நாமக்கள் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர்.
3 பேரும் ஐயப்ப பக்தர்கள் வேடத்தில் புதுச்சேரியிலிருந்து மது பாட்டில்களைக் கடத்தி தூத்துக்குடிக்குச் சென்று கொண்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் பின்னர் அவர்களை சிறையில் அடைத்தனர்.