அரசு பள்ளி மாணவர் சீருடை மாறுகிறது
சென்னை: வரும் 2010-11ம் கல்வியாண்டில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் சீருடையை மாற்ற பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
தனியார் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் சீருடையை அந்தந்த பள்ளி நிர்வாகங்களே முடிவு செய்கின்றன. பெரும்பாலும், தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் பல வண்ணங்களில் சீருடைகளை அணிந்து செல்கின்றனர்.
ஆனால், அரசு பள்ளி மாணவ, மாணவிகளைப் பொறுத்தவரை 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே வண்ண சீருடையைத் தான் அணிந்து வருகின்றனர்.
பெரும்பாலும் காக்கி அல்லது ஊதா நிற பேன்ட் வெள்ளை நிற சட்டை தான் சீருடையாக உள்ளது. அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசே இலவச சீருடையை வழங்கி வருகிறது.
இந் நிலையில் காலத்திற்கு ஏற்றார்போல் சீருடையை மாற்ற வேண்டும் என அரசுக்கு பள்ளிக் கல்வித்துறை பரிந்துரை செய்துள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையி்ல்,
மாணவர்களின் மன நிலையை அறிந்து, காலத்திற்கு ஏற்ப புதிய சீருடைகளை வழங்க முடிவு செய்துள்ளோம். சீருடையின் நிறத்தை மாற்றி, கட்டம் அல்லது கோடுகள் கொண்ட சட்டைகளை மாணவ, மாணவிகளுக்கு புதிய சீருடையாகக் கொண்டு வருவது குறித்து பரிசீலித்து வருகிறோம்.
மாணவிகளுக்கு 'ஸ்கர்ட்' வழங்குவதா அல்லது சுடிதார் வழங்குவதா என்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.
புதிய சீருடை மாற்றம் அடுத்த கல்வியாண்டில் அமலுக்கு வராது. 2010-2011ம் கல்வியாண்டில் தான் இது நடைமுறைக்கு வரும் என்றார்.