விதிப்படி மீண்டும் ராஜினாமா கடிதம் தரத் தயார்-செல்வப்பெருந்தகை
சென்னை: எனது ராஜினாமா கடிதம் விதிகளின்படி இல்லை என்று தெரிவித்தால் முறைப்படி மீண்டும் கடிதம் அளிக்கத் தயார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்த எம்எல்ஏ செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
திருமங்கலம் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் காலியாக உள்ள மங்களூர் தொகுதிக்கு இடைத் தேர்தலை நடத்தவிடாமல் முதல்வர் கருணாநிதி தடுத்துவிட்டதாக வைகோ, விஜய்காந்த் உள்ளிட்டோர் புகார் கூறியுள்ளனர்.
ஆனால், செல்வப் பெருந்தகையின் ராஜினாமா கடிதம் முறையாக இல்லாததால் அவரது ராஜினாமா கடிதம் இன்னும் சபாநாயகரால் ஏற்கப்படவில்லை என்று முதல்வர் கருணாநிதி விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து செல்வப்பெருந்தகை கூறுகையில்,
நான் கடிதம் கொடுத்த அன்றே டைப் செய்து தரக் கூடாது என்றும், கையால் எழுதித் தான் தர வேண்டும் என்றும், ராஜினாமா கடிதத்தை அதற்கென்று உள்ள முறையில் தான் எழுதப்பட வேண்டும் என்றும் சட்டமன்ற அதிகாரிகள் கூறினர்.
ஆனால், முன்பு ஒருமுறை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது ராஜினாமா கடிதத்தை தந்தபோது நானும் அருகில் இருந்தேன். அப்போது அவர் என்ன வழிமுறைகளைப் பயன்படுத்தி கடிதம் தந்தாரே அதே முறையில் தான் நானும் கடிதம் தந்தேன்.
எனினும் விதிகளின்படி கையால் எழுதி இன்னொரு முறை கடிதம் தந்தால் தான் ராஜினாமா ஏற்படும் என்று தெரிவித்தால் அதே முறையில் மீண்டும் ஒரு ராஜினாமா கடிதத்தைத் தரத் தயாராகவே உள்ளேன் என்றார்.