ஓட்டுக்கு நோட்டு விவகாரம்-அடுத்து என்ன?: சிதம்பரம் கையில்!
டெல்லி: நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அணி மாறி வாக்களிக்க பாஜக எம்.பிக்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் விரைவில் முடிவு செய்யவுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, லோக்சபாவில் நம்பிக்கை ஓட்டு கோரிய போது, எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
பாரதிய ஜனதா எம்.பிக்கள் சிலர் லோக்சபாவில் கட்டுக் கட்டாக பணத்தை எடுத்துக் காண்பித்ததால், பிரச்னை பெரிதானது.
இதுகுறித்து விசாரிக்க காங்கிரஸ் எம்.பி. கிஷோர் சந்திர சூரிய நாராயண தேவ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. விசாரணை நடத்திய இந்தக் குழு, எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட புகாரில், சமாஜ்வாடி அமர்சிங் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலுக்கு தொடர்பு இல்லை என, தெரிவித்தது.
அதே நேரத்தில், அமர்சிங்கின் உதவியாளர் சஞ்சீவ் சக்சேனா, டிரைவர் சுகைல் இந்துஸ்தானி மற்றும் அத்வானியின் உதவியாளர் சுதீந்திர குல்கர்னி ஆகியோரிடமும், பாஜக எம்பிக்கள் மூன்று பேரிடமும் இந்த விவகாரம் தொடர்பான தனி புலனாய்வு அமைப்பு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என பரிந்துரை செய்திருந்தது.
விசாரணைக் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்ட லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில், சஞ்சீவ் சக்சேனா, சுகைல் இந்துஸ்தானி மற்றும் சுதீந்திர குல்கர்னி ஆகியோரின் தொடர்பு குறித்து விசாரணை நடத்த பார்லிமென்ட் குழு பரிந்துரை செய்துள்ளது.
அதனால், மூன்று பேர் தொடர்பான இந்த விவகாரத்தை தக்க நடவடிக்கை எடுப்பதற்காக உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்கிறேன்' என்றார்.
எம்.பிக்கள் சபையில் காண்பித்த, தற்போது லோக்சபா செயலரின் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு கோடி ரூபாய் பணம், உரிமை கோரப்படாத பணமாக கருதி, ஒரு மாத காலத்திற்குப் பின், அரசின் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்' என்றும் மேலும் கூறினார்.
லஞ்ச விவகாரத்தில், எம்.பிக்கள் அல்லாத மூன்று பேர் மீது என்ன நடவடிக்கை என்பது உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதால், அமைச்சர் சிதம்பரமே இதுதொடர்பாக முடிவு செய்வார் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications