For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முகர்ஜியை உடனே இலங்கைக்கு அனுப்ப திமுக வலியுறுத்தல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை உடனடியாக இலங்கைக்கு அனுப்பி போர் நிறுத்த முயற்சிகளை பிரதமர் மன்மோகன் சிங், மேற்கொள்ள வேண்டும் என்று திமுக உயர் நிலை செயல் திட்ட குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந் நிலையில் இன்று பிரணாப் முகர்ஜியை திமுக மூத்த மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு சந்தித்து இந்த தீர்மான நகலை வழங்கி, உடனே கொழும்பு செல்ல வலியுறுத்தவுள்ளார்.

முன்னதாக நேற்று சென்னையில் நடந்த திமுக உயர் நிலை செயல் திட்ட குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:

முதல்வர் கருணாநிதி தலைமையில், தமிழக அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் கடந்த 4ம் தேதி டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம், அரசியல் ரீதியான தீர்வு காணும் முன்னோடி நடவடிக்கையாக, உடனடியாகப் போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென்று இலங்கை அரசுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று எடுத்துரைத்ததன் விளைவாக,

இலங்கையிலே நிலைமைகள் சீர்படுவதைப் பற்றிக் கவனிக்கவும், போரை நிறுத்துவதைப் பற்றி வலியுறுத்துவதற்காகவும், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு நேரில் அனுப்பி வைக்க பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புக்கொண்டார்.

அதற்கேற்ப, பிரணாப் முகர்ஜி உடனடியாக இலங்கைக்கு அனுப்பி, உரிய பேச்சுவார்த்தைகளை நடத்தி, போர் நிறுத்ததற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென பிரதமரையும், மத்திய அரசையும் இந்த உயர்நிலை செயல்திட்டக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

டெல்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் சோனியா காந்தி சீரிய தலைமையிலான அகில இந்திய காங்கிரஸ் கட்சி மூன்று மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதோடு; இரண்டு மாநிலங்களில், ஏற்கனவே இருந்த எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருப்பதற்கு உயர்நிலை செயல்திட்டக் குழு பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

மும்பை மாநகரில் சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம், தாஜ் மற்றும் ஓபராய் ஓட்டல்கள், நரிமன் இல்லம் ஆகிய இடங்களில் தீவிரவாதிகள், பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட வெளிநாட்டவர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள், காவல்துறையினர், தேசிய பாதுகாப்புப் படையினர், தீவிரவாத எதிர்ப்புப் படையினர் ஆகியோருக்கு இந்த உயர்நிலை செயல்திட்டக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X