சென்னையில் பெண் ரெளடி வெட்டிக் கொலை
யானைகவுனி ஆதியப்பன் தெருவைச் சேர்ந்த பரமேஸ்வரி லாரி ஷெட்களுக்கு சரக்குகளை ஏற்றி இறக்கும் கூலித் தொழிலாளர்களை சப்ளை செய்யும் மேஸ்திரியாக இருந்தார்.
அத்துடன் பல்வேறு கிரிமினல் நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட்டு வந்தார். இவர் மீது கொலை முயற்சி, மிரட்டுதல், அடித்து காயம் ஏற்படுத்துதல் உள்பட 18 வழக்குகள் உள்ளன.
கடைகளில் மாமூல் வசூலிப்பது, அரசியல் கட்சி கூட்டங்களுக்கு ஆட்களை அழைத்து செல்வது, குடும்ப பிரச்சினைகளில் தலையிட்டு பஞ்சாயத்து செய்வது என தாதாவாக வலம் வந்த இவருக்கு குடிப் பழக்கமும் போதையில் ரகளையில் ஈடுபடும் வழக்கமும் உண்டு.
நேற்றிரவும் போதையில் பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். அருகே அவரது தம்பி, மகன், மகள் மற்றும் உறவினர்களும் உறங்கினர்.
இந் நிலையில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் பரமேஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு அவரது உறவினர்கள் விழித்து பார்த்தனர். அப்போது 3 பேர் பரமேஸ்வரியை வெட்டிக் கொண்டிருந்தனர்.
ஆட்கள் வருவதைப் பார்த்தும் மூவரும் தப்பியோடிவிட்டனர்.
கழுத்து, முகம் உள்பட பல்வேறு பாகங்களில் வெட்டுக் காயத்துடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பரமேஸ்வரியை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
பெண் தாதாவாக செயல்பட்ட பரமேஸ்வரியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தக் கொலையை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
விசாரணையில் பரமேஸ்வரிக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. அவர்களுக்கு ஏற்பட்ட மோதலில் பரமேஸ்வரி கொல்லப்பட்டரா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.