முக்கிய ராணுவ ஆவணங்களுடன் பாக். உளவாளி கைது
லக்னோ: பாகிஸ்தானைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ. ஏஜென்ட் ஒருவர், ராணுவம் தொடர்பான முக்கிய ஆவணங்களுடன் லக்னோவில் பிடிபட்டார்.
லக்னோவில் உள்ள சர்பாக் ரயில் நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.
அவரது பெயர் அப்துல் ஜாபர் என்கிற சிக்கந்தர். பாகிஸ்தானின் கராச்சி நகரைச் சேர்ந்தவர். உ.பி. மாநில தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ராணுவம் தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
லக்னோ கன்டோன்மென்ட் பகுதியின் வரைபடங்கள், மத்திய ராணுவ கமாண்ட் குறித்த பல முக்கியத் தகவல்கள் உள்ளிட்டவை அவரிடம் இருந்தன.
பாகிஸ்தான் ராணுவ உளவுப் பிரிவால் பயிற்சி அளிக்கப்பட்டவர் சிக்கந்தர். இந்திய விமானப்படை, ராணுவம், கடற்படையின் முக்கிய பகுதிகளில் உளவு பார்க்க சிறப்பு பயிற்சியும் பெற்றுள்ளார்.
தான் சேகரிக்கும் தகவல்களை இன்டர்நெட் மூலமும், தொலைபேசி மூலமும் பாகிஸ்தானில் உள்ள ஐஎஸ்ஐ உயர் அதிகாரிகளுக்கு அவர் வழங்கி வந்துள்ளார்.
2007ம் ஆண்டுக்கு முன்பு வரை சிக்கந்தர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்தார். அதன் பின்னர் அவரைத் தொடர்பு கொண்ட ஐ.எஸ்.ஐ., இந்தியாவில் உளவு பார்க்கும் பணிக்கு அவரை நியமித்தது.
பாகிஸ்தானில் 9 மாத பயிற்சி எடுத்துக் கொண்ட பின்னர் அவர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளார். சிக்கந்தரின் குடும்பத்திற்கான அனைத்து செலவுகளையும் ஐ.எஸ்.ஐ.யின் ராணுவ புலனாய்வுப் பிரிவே பார்த்துக் கொள்கிறதாம்.
கடந்த நவம்பர் 15ம் தேதி காத்மாண்டு வழியாக இந்தியாவுக்கு வந்துள்ளார் சிக்கந்தர்.
பல்வேறு ஆசிய நாடுகளில் உளவு பார்த்துள்ள சிக்கந்தர், இந்தியாவுக்கு இதற்கு முன்பு 3 அல்லது நான்கு முறை வந்துள்ளாராம்.
அவரை போலீஸ் ரிமான்ட்டில் எடுத்து தீவிரமாக விசாரிக்க தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications