மலேசியாவில் வாடும் தமிழ் இளைஞர்கள்: மீட்க கருணாநிதி கோரிக்கை
டெல்லி: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட 21 தமிழ் இளைஞர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக கருணாநிதி எழுதிய கடிதத்தை, மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்துக் கொடுத்தார்.
அந்தக் கடிதத்தில், உமர் அலி என்பவர் இந்த 21 இளைஞர்களுக்கும் ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்துள்ளார்.
ஒவ்வொருவரிடமும் இதற்காக தலா ரூ. 1.70 லட்சம் பணத்தையும் பெற்றுள்ளார். பின்னர் அனைவரையும் தமிழகத்திலிருந்து மலேசியாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு சென்றதும், 21 பேரின் பாஸ்போர்ட்களையும் வாங்கிக் கொண்டு தலைமறைவாகி விட்டார்.
அவரை நம்பி போன 21 தமிழக இளைஞர்களும் கோலாலம்பூர் பட்டு குகை முருகன் கோவிலில் தங்கியிருந்தபோது மலேசிய போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.
இந்த நிலையில் ஏமாற்றிய உமர் அலி கடந்த அக்டோபர் மாதம் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தை மலேசிய அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்லி, சிறையில் வாடி வரும் 21 தமிழக இளைஞர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருணாநிதி கோரியுள்ளார்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், தமிழக இளைஞர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்றும் பிரணாப் முகர்ஜி உறுதியளித்துள்ளதாக டி.ஆர்.பாலுவின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications