விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய கலெக்டர்!
திருத்தணி: சாலை விபத்தில் சிக்கிய 4 பேரை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்து உதவினார் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரமூர்த்தி.
திருத்தணி கச்சேரி தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (30), பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்த மணி (24) ஆகியோர்
மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் சென்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அதே போல சென்னை வியாசர்பாடி வி.வி.எஸ். காலனியைச் சேர்ந்த முருகன் (38), சந்திரசேகர் (37) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, ஆற்காடு குப்பம் அருகே கொசஸ்தலை ஆற்றின் அருகில் இரு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் 4 பேரும் படுகாயமடைந்து மயங்கிக் கிடந்தனர்.
அப்போது அந்த வழியாக சென்ற திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரமூர்த்தி விபத்தில் சிக்கியவர்களைக் கண்டு காரை நிறுத்தினார்.
இருவரை உதவியாளர்கள் உதவியோடு மீட்டு அந்த வழியே வந்த காரை நிறுத்தி சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அதே போல மற்ற இருவரையும் மற்றொரு காரில் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.












Click it and Unblock the Notifications