பாக்.: அனைத்து நடவடிக்கைகளையும் பரிசீலிப்போம் - பிரணாப்
காங்டாக்: தீவிரவாதிகள், தீவிரவாத செயல்களுக்கு எதிராக செயல்படுவது குறித்து பாகிஸ்தான் அளித்துள்ள வாக்குறுதிகளை அந்த நாடு செயல்படுத்தத் தவறினால், அந்த நாட்டின் மீது அனைத்து வகையான நடவடிக்கைகள் குறித்தும் பரிசீலிக்கப்படும் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
சிக்கிம் பல்கலைக்கழகத்தில் நடந்த மாநாட்டிற்கு பிரணாப் முகர்ஜி தொடக்க உரை செய்தியை அனுப்பியிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நமது பிராந்தியத்தின் மிக முக்கியப் பிரச்சினையாக, மிரட்டலாக தீவிரவாதம் உள்ளது. ஒரு நாடு, நமக்கு கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறினால், பிறகு நடவடிக்கைகளை சந்திக்க அது தயாராக வேண்டும். அதுதொடர்பாக நம்மிடம் இருக்கும் அனைத்து வகையான நடவடிக்கைகள் குறித்தும் நாம் பரிசீலிக்க வேண்டியிருக்கும்.
நமது மக்களையும், நாட்டையும், தீவிரவாதத் தொல்லையிலிருந்து காக்க இதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.
தீவிரவாத செயல்களுக்கு ஆதரவு தரக் கூடாது, தீவிரவாத கட்டமைப்பை தகர்க்க வேண்டும் என்று நமது அண்டை நாட்டுக்கு நாம் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் தொடர்ந்து அந்த நாடு நமது கோரிக்கைகளை நிராகரித்து வருகிறது, புறக்கணித்து வருகிறது.
மேலும், நமக்கு அது கொடுக்கும் வாக்குறுதிகளையும் முறையாக கடைப்பிடிப்பது இல்லை. மும்பை மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் சம்பவம், எந்த அளவுக்கு அண்டை நாட்டை தீவிரவாதிகள், சுதந்திரமாக பயன்படுத்தி வருகிறார்கள் என்பதை நிரூபிப்பதாக உள்ளது.
அந்த நாடு தீவிரவாதிகளுக்கு முழு உதவிகளையும் செய்து வருகிறது. அந்த உதவி இல்லாமல், தீவிரவாதிகளால் இவ்வளவு சுதந்திரமாக செயல்பட்டிருக்க முடியாது.
தீவிரவாத தடுப்பு மற்றும் ஒழிப்பு நடவடிக்கைகளை இந்தியா இன்னும் துல்லியமாக்கி செயல்படும்.
நமது அண்டை நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இதற்குக் காரணம் அங்கு பல முனைகளில் அதிகார மையங்கள் இருப்பதே என்று கூறியுள்ளார் பிரணாப்.












Click it and Unblock the Notifications