திருமா, வீரமணியை சேர்க்காதீர்கள்-'கராத்தே'
சென்னை: சுப.வீரபாண்டியன், திருமாவளவன், வீரமணி ஆகியோரை தமிழக முதல்வர் கருணாநிதி இனி சேர்க்கக் கூடாது என்று முன்னாள் துணை மேயரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான கராத்தே தியாகராஜன் கூறினார்.
பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஆகியோரின் உருவப் பொம்மைகளை பெரியார் தி.கவைச் சேர்ந்தவர்கள் எரித்ததையடுத்து கோட்டையை நோக்கி ஊர்வலம் செல்ல முயன்ற கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட 200 காங்கிரசார் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து கராத்தே தியாகராஜன் கூறுகையில்,
பெரியார் தி.கவைச் சேர்ந்தவர்களை போலீசார் முன்கூட்டியே கைது செய்ய தவறிவிட்டனர். அவர்கள் சத்தியமூர்த்தி பவன் அருகே வந்து பிரதமர், சோனியாகாந்தி, தங்கபாலு ஆகியோரின் உருவ பொம்மைகளை போலீசாரின் கண் முன்னாலேயே எரித்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை போலீசார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததும் கண்டனத்துக்குரியது.
இனி அரசின் பொது நிகழ்ச்சிகளுக்கு சுப.வீரபாண்டியன், திருமாவளவன், வீரமணி ஆகியோரை தமிழக முதல்வர் இனி அழைக்கக்கூடாது. இவர்களை அவர் அழைப்பதால்தான் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் பற்றி இவர்கள் அதிகம் பேசி வருகின்றனர்.
அறிஞர் அண்ணா குறித்து டி.என்.சேஷன் ஒரு புத்தகம் எழுதியதை கண்டித்து 1994ம் ஆண்டு ஆயிரம்விளக்கு காவல் நிலையத்துக்கு முன்பு இப்போதைய முதலமைச்சர் போராட்டம் நடத்தினார்.
அண்ணாவைப் பற்றி குறிப்பிட்டது முதலமைச்சருக்கு துன்பத்தை ஏற்படுத்தியதுபோல எங்கள் தலைவர் ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் நயவஞ்சகமாக படுகொலை செய்தது எங்கள் உணர்வை எவ்வளவு பாதித்திருக்கும்?.
புலி ஆதரவாளர்களின் நடவடிக்கைகளை முதல்வர் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். எந்த காரணம் கொண்டும் வன்முறைக்கு இடம் தரக்கூடாது. ஏற்கனவே ராஜீவ் மரணத்தை கொச்சைப்படுத்திய ஜெயலலிதா, அதற்கான தண்டனையை அனுபவித்தார்.
எனவே, விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை முதல்வர் தன்னருகே சேர்க்கவே கூடாது. தமிழக காங்கிரஸ்காரர்களின் உணர்வை முதல்வர் மதிக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications