கட்டணம் கட்டத் தவறிய மாணவர்களை பஸ் பின்னால் ஓட விட்டு சித்திரவதை
மதுரை: பள்ளி பஸ் கட்டணத்தை செலுத்தத் தவறிய மாணவ, மாணவியரை பள்ளிப் பேருந்துக்குப் பின்னால் ஓடி வரச் செய்த கொடுமை திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் நடந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவைச் சேர்ந்தவர் ஈஸ்வரி சீனிவாசன். இவர் வத்தலகுண்டு போலீஸில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அதில், எனது மகன்கள் சுதிர் மற்றும் சிவபாலன் ஆகிய இருவரும் வத்தலகுண்டில் உள்ள சாரதா வித்யாலாயா பள்ளியில் படித்து வருகின்றனர்.
புதன்கிழமையன்று, பள்ளிப் பேருந்துக்கான கட்டணத்தை உரிய காலத்திற்குள் செலுத்தத் தவறியதற்காக எனது மகன்களையும், பள்ளியைச் சேர்ந்த 30 மாணவ, மாணவியரையும், கிட்டத்தட்ட 500 மீ்ட்டர் தொலைவுக்கு, பள்ளிப் பேருந்துக்குப் பின்னால் ஓடி வரச் செய்து பள்ளி நிர்வாகம் கொடுமையான தண்டனையைக் கொடுத்துள்ளது.
பள்ளிக்குப் பின்னால் வைத்து இந்தத் தண்டனையைக் கொடுத்துள்ளனர். இதுகுறித்து பள்ளி முதல்வர் நாகரத்தினம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து பள்ளி முதல்வர் நாகரத்தினம் கூறுகையில், ஈஸ்வரி சீனிவாசன், தனது மகன்களின் பள்ளிப் பேருந்துக் கட்டணமாக இதுவரை ரூ. 8000 கட்ட வேண்டியுள்ளது. இதைக் கட்டாமல் இருப்பதற்காக இவ்வாறு அவதூறான புகாரைக் கூறியுள்ளார். மற்றபடி எங்களது பள்ளிப் பிள்ளைகளை நாங்கள் எந்த வகையிலும் துன்புறுத்தவில்லை. ஈஸ்வரி கூறும் புகார்கள் பொய்யானவை என்று முடித்துக் கொண்டார்.
இதற்கிடையே, பள்ளி வளாகத்தில், கூடிய மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் பஸ்சுக்குப் பின்னால் தங்களது குழந்தைகளை ஓடி வரச் செய்து துன்புறுத்தியதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வத்தலகுண்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இருப்பினும் இதுவரை எப்.ஐ.ஆர். போடப்படவில்லை.