சத்தியமூர்த்தி பவன் தாக்குதல்: 11 விடுதலைச் சிறுத்தை தொண்டர்கள் கைது
சென்னை: காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனைத் தாக்கிய வழக்கில் இதுவரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று சத்தியமூர்த்தி பவனில் புகுந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதால் காங்கிரஸார் கொதிப்படைந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அண்ணா சாலை போலீஸ் நிலையத்தில்,காங்கிரஸ் சார்பில் புகார் தரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தாக்குதல் தொடர்பாக நேற்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தென்சென்னை மாவட்ட மாணவரணி துணைச்செயலாளர் பச்சை, பகலவன், சாரநாத், ரஜபுத்திரன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று ஐஸ் ஹவுஸ் பார்த்தசாரதி, பூபாலன் என்கிற குட்டி, பாபு, அண்ணா சாலை தர்கா பின்புறம் உள்ள குடிசைப் பகுதியைச் சேர்ந்த சீதாராமன் என்கிற சீராளன், பார்டர் தோட்டம் ராஜா ஆகியோர் இன்று கைதாகினர்.
பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் உருவபொம்மையை எரித்ததாக பெரியார் திராவிடர் கழகத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆனூர் ஜெகதீசன் உள்ளிட்ட அந்த அமைப்பைச் சேர்ந்த 62 பேர் ஏற்கனவே நேற்று கைது செய்யப்பட்டனர்.
இருப்பினும் மத்திய அமைச்சர் இளங்கோவன் மற்றும் தங்கபாலு கொடும்பாவிகளை எரித்ததற்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று கைது செய்யப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 6 பேர் மற்றும் பெரியார் திகவைச் சேர்ந்த 62 பேர் ஆகிய 68 பேரும் மாலையில் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.