தமிழ் அகதிகளுடன் சேர்ந்து தமிழகம் வந்த சிங்கள காதல் ஜோடி
ராமேஸ்வரம்: தனுஷ்கோடிக்கு வந்த தமிழ் அகதிகளுடன் சேர்ந்து சிங்கள காதல் ஜோடி ஒன்றும் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தனுஷ்கோடிக்கு நேற்று படகு மூலம் 21 பேர் அரிச்சமுனைப் பகுதியில் வந்திறங்கினர். அவர்களை கியூ பிரிவு போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
19 பேர் தமிழர்கள் என்று தெரிய வந்தது. மற்ற இருவரும் காதல் ஜோடிகள், சிங்களர்கள். இதனால் குழம்பிய போலீஸார் அவர்களை தனியாகப் பிரித்து இலங்கைத் தமிழர்களின் உதவியுடன் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் காதலரின் பெயர் துஸ்ரா சந்தனா, பெண்ணின் பெயர் சாருகா தில்கானி எனத் தெரிய வந்தது.
இருவரும் கொழும்பைச் சேர்ந்தவர்கள். கடுவத்தை பகுதியில், வசித்து வந்தவர் சாருகா. துஸ்ரா, கொழும்பில் உள்ள ஒரு டாக்டரின் வீட்டில் டிரைவராக பணியாற்றி வந்தார்.
இருவரது காதலுக்கும் இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரிக்கவும் முயன்றுள்ளனர். இதையடுத்து தமிழர்கள் வசிக்கும் வவுனியா பகுதியில் அடைக்கலம் புகுந்தனர். கிட்டத்தட்ட 7 மாதங்கள் அங்கு வசித்துள்ளனர்.
ஆனால் அங்கு ராணுவ கெடுபிடி ஜாஸ்தியாக இருந்ததால், தமிழகத்திற்கு அகதிகளாக செல்லும் தமிழர்களோடு இணைந்து தாங்களும் தமிழகம் செல்ல முடிவு செய்தனர்.
அதன்படி 19 தமிழர்களுடன் இணைந்து தனுஷ்கோடிக்கு வந்து சேர்ந்தனர் என்று விசாரணையில் தெரிய வந்தது.
இருவரையும் தமிழ் அகதிகள் பட்டியலில் சேர்க்க முடியாது என்பதால் இவர்களை அகதிகளாக போலீஸார் பதிவு செய்யவில்லை. மாறாக,இருவரும் விசா, பாஸ்போர்ட் இல்லாமல் வந்துள்ளதால் அவர்கள் மீது இந்திய பாஸ்போர்ட் சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.
தமிழ் அகதிகளுடன் இணைந்து சிங்கள காதல் ஜோடி ஒன்று அகதிகளாக வந்திருப்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.