சண்டை போட ரெடி, தேதியைச் சொல்லுங்கள்: தங்கபாலு சவால்
சென்னை: காங்கிரஸாருடனோ அல்லது காங்கிரஸ் தலைமையுடனோ சண்டை போட யாராவது விரும்பினால் தேதியைக் குறிப்பிட்டு விட்டு வரட்டும். நாங்கள் சண்டைக்குத் தயார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு சவால் விட்டுள்ளார்.
தேனி சென்றிருந்த தங்கபாலு இன்று சென்னை திரும்பினார். பின்னர் முற்பகலில் அவர் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த காங்கிரஸ் தொண்டர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் உள்ளே புகுந்து அடிக்கிறார்கள். எங்களுக்கும் ஆயுதங்களைக் கொடுங்கள். இல்லாவிட்டால் நாங்கள் செருப்படிதான் வாங்க வேண்டியிருக்கும் என்று தங்கபாலுவைச் சூழ்ந்து கொண்டு கோஷமிட்டனர்.
அவர்களை அமைதிப்படுத்தினார் தங்கபாலு. பின்னர், நடந்த அனைத்தும் சோனியா காந்திக்குத் தெரிவிக்கப்பட்டு விட்டது. பொறுமையாக இருங்கள் என்றார்.
பிறகு செய்தியாளர்களை தங்கபாலு சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நேற்றைய தினம் நான் தேனி மாவட்டத்தில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்றேன்.
அந்த நேரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருடைய உருவ பொம்மைகளை பெரியார் தி.க.வினர் எரித்துள்ளனர்.
இதுபற்றி கேட்க சென்ற காங்கிரசாரை போலீசார் கைது செய்துள்ளனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் அலுவலகத்தில் காங்கிரசார் யாரும் இல்லாத நேரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கற்களை வீசியும், இங்குள்ள நண்பர்களை அடித்தும் வன்முறை நிகழ்த்தியுள்ளனர்.
நல்ல பண்பல்ல ...
ஒரு கட்சி அலுவலகத்தில் நுழைந்து இவ்வாறு செய்வது நல்ல பண்பல்ல என்பது அவர்களுக்கு தெரியவில்லை. இதை கண்டிக்கும் வகையில் நான் தேனியில் சாலை மறியல் செய்து கைதானேன். தெருவுக்கு வந்து போராடும் அளவிற்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.
சோனியாகாந்தியின் உருவ பொம்மை எரிக்கப்பட்ட போது போலீசார் வேடிக்கை பார்த்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் காங்கிரசார் கொந்தளித்துள்ளனர். ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி உரிய முறை யில் இப்பிரச்சனையை கையாளும். காங்கிரசார் யாரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
சண்டைக்கு தயார் ...
காங்கிரஸ் தலைமை மீதோ, காங்கிரசார் மீதோ சண்டை போட யாராவது விரும்பினால் என்னிடத்தில் தேதி குறிப்பிட்டுவிட்டு வாருங்கள். சந்திக்க தயாராக இருக்கிறோம். பேடித்தனமாக கட்சி அலுவலகத்தை தாக்குவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.
என்ன விலை கொடுத்தாவது எங்கள் கொடியை காப்போம். சோனியாகாந்தி மீது இனி யாராவது இழி செயல் செய்ய நினைத்தால் விடமாட்டேம். அவரை கொச்சைப் படுத்தி பேசுவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
நேற்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு காங்கிரஸ் அலுவலகத்தை தாக்கியது விடுதலைச் சிறுத்தைகள் அல்ல என்றார். அதற்கு நான், வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளதை போட்டுப் பாருங்கள், யார் என்று தெரியும் என கூறினேன்.
திருமாவளவனுக்கு அருகதை இல்லை ...
காங்கிரஸ் பற்றி பேசுவதற்கு திருமாவளவனுக்கு அருகதை இல்லை. நேற்று வரை அவர் அதிமுகவுடன் இருந்தவர். காங்கிரசை எதிர்க்க விடுதலைச் சிறுத்தைகளுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது? இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள்? என்பது தெரிய வேண்டும். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசுவோரை நாங்கள் எதிர்ப்போம்.
சட்டத்தின் ஆட்சி நடக்க வேண்டும் ...
தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்க வேண்டும் என்று விரும்புகிறோம். எங்கள் ஆதரவில் ஆட்சி நடக்கும் தமிழகத்தில் சோனியாகாந்திக்கு நடந்த கொடுமையை நினைத்து வருந்துகிறோம். இதனால் காங்கிரசார் கொந்தளித்து போயுள்ளனர்.
ஆயினும், காங்கிரஸ் கட்சி எப்போதுமே கூட்டணி தர்மத்தை காக்கும் கட்சி. அதனடிப்படையில் திருமங்கலத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை காங்கிரஸ் ஆதரிக்கும். இதற்காக என்.எஸ்.வி.சித்தன் எம்பி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார் தங்கபாலு.
பின்னர் கட்சியின் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் தனியாக ஆலோசனை நடத்தினார் தங்கபாலு.
தேனியில் கைதாகி விடுதலை:
முன்னதாக சத்தியமூர்த்தி பவன் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து தேனியில், காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு சாலை மறியல் போராட்டம் நடத்திக் கைதாகி பின்னர் விடுதலையானார்.
சத்தியமூர்த்தி பவன் சம்பவத்தைக் கண்டித்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் காங்கிரஸார் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் குதித்தனர்.
தேனி சென்றிருந்த காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதும், அவர் தலைமையில் பெரும் திரளான காங்கிரஸார், தேனி - பெரியகுளம் சாலையில் மறியல் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அந்த சமயத்தில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் சார்பில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த போர்டுகளை சிலர் அடித்து உடைத்தனர். மேலும் அதிலிருந்த திருமாவளவனின் உருவப் படத்தையும் எடுத்து கொளுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்தனர். தங்கபாலு உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து தங்கபாலு, எம்.பி. ஹாரூண் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரைக் கைது செய்து அப்புறப்படுத்தினர். பின்னர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
பிறகு செய்தியாளர்களிடம் தங்கபாலு பேசுகையில், விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை கைது செய்ய வேண்டும். இதுதொடர்பான அடுத்த கட்ட போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.