10 நாட்களில் 200 இலங்கை ராணுவ வீரர்கள் பலி
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் மற்றும் நீவில் பகுதிகளில் கடந்த பத்து நாட்களாக கடும் சண்டை நடந்து வருகிறது. இதுவரை 200-க்கும் அதிகமான ராணுவ வீர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 53 பேர் காணாமல் போய் உள்ளனர்.
இதுதொடர்பான தகவலை இலங்கை பாதுகாப்புத்துறை இணையதளம் தெரிவித்துள்ளது.
புலிகள் தரப்பு, இறந்த ராணுவ வீரர்களில் 53 பேரின் உடல்களை இதுவரை கைப்பற்றியுள்ளனர்.
பரந்தன் பகுதியில் உள்ள "எல்" வடிவ மண் அணையை உடைக்கும் முயற்சிகளை படைத்தரப்பு மேற்கொண்ட போது புலிகள் தரப்பில் கடும் தாக்குதல் தொடுக்கப்பட்டது.
சில பகுதிகளில் மண் அணைகளின் உயரம் 20 அடியாக உள்ளது. அங்கு விடுதலைப் புலிகள் கனரக இயந்திர துப்பாக்கிகளை நிறுவியுள்ளனர்.
மண் அணைகளுக்கு முன்பாக அகழிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அவை நீரால் நிரம்பியுள்ளன. செங்குத்தாக மேல் உயரும் மண் அணைகளை தாண்டுவது மிகக் கடினமானதாகும்.
தொடர்ந்து பெய்து வரும் மழையும், இந்த மண் தடுப்பணைகளும் ராணுவத்திற்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளன. ஜனவரி மத்தி வரை மழை நீடிக்கும் என்பதால் ராணுவத்தினரால் கிளிநொச்சிக்குள் நுழைய முடிவது என்பது சற்று சிரமமானதேயாகும்.
ராணுவ வீரர்கள், மண் அணைகளை நெருங்கும் வரை அனுமதிக்கின்றனர் புலிகள். அதன் பின்னர் கனரக துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டுத் தள்ளுகின்றனர்.
இதனால் திரும்பியும் போக முடியாமல்,மண் அணைகளைத் தாண்டவும் முடியாமல் சிக்கி சிதறுண்டு போகிறது இலங்கைப் படை.
இந்த மண் அணைகள் மற்றும் புலிகளின் கடும் தாக்குதலால் ராணுவ குழுக்கள் பெரும் அழிவை சந்தித்துள்ளன. பரந்தன் மற்றும் நீவில் பகுதிகள் பரந்த வெளிகளை கொண்டது. எனவே அங்கு முன்னேறிச் செல்வது மிகவும் கடினமானது.
மண் அணைகளை கைப்பற்றும் முயற்சியாக ராணுவத்தினர் தினசரி 10 முதல் 15 முறை தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்கு துணையாக விமானப்படையும் 10 முதல் 15 தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.
இதற்கிடையே, விடுதலைப் புலிகள் எவ்வாறு பெருமளவிலான பீரங்கி எறிகணைகளை பயன்படுத்துகின்றனர் என்பது குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், புலிகளுக்குத் தொடர்ச்சியாக ஆயுதம் கிடைத்து வருகிறது. அண்மையில் முல்லைத்தீவு கடற்பகுதியில் விடுதலைப் புலிகளின் ஆயுத கப்பல் ஒன்று தாக்கப்பட்டது. ஆனால் அந்தக் கப்பலில் இருந்த கணிசமான ஆயுதங்கள் ஏற்கனவே இறக்கப்பட்டு விட்டதாம். இதனால் புலிகளுக்கு பெரும் நஷ்டம் எனக் கூற முடியாது என்று கூறப்படுகிறது.
புலிகளின் படகு மூழ்கடிப்பு:
இதற்கிடையே, முல்லைத்தீவு அருகே விடுவதலைப் புலிகளின் படகு ஒன்றை விமானப்படை குண்டு வீசித் தகர்த்துள்ளதாக ராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முல்லைத்தீவு கடற் பகுதியில் வந்த விடுதலைப் புலிகளின் படகு மீது இலங்கை விமானப்படை விமானங்கள் குண்டு வீசித் தாக்கின. இதில் அந்தப் படகு கடலில் மூழ்கியதாக விமானப்படை செய்தித் தொடர்பாளர் ஜனக நாணயக்காரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், புலிகளின் படகை விமானப்படை விமானங்கள் தாக்கி அழித்தன. அதேபோல புலிகள் வசம் உள்ள பகுதிகளிலும், சுற்றுப் பகுதிகளிலும் சரமாரியாக தாக்குதல் நடந்து வருகிறது.
விமானப்படையினருக்கு உதவியாக ராணுவத்தின் 57 பிரிவு படையினரும் உடன் தாக்கினர் என்றார்.













Click it and Unblock the Notifications