பிப்ரவரியில் திமுகவில் இணையும் போட்டி மதிமுக
திருவாரூர்: தங்களது தலைமையிலான மதிமுக வரும் பிப்ரவரி மாதம் போட்டி திமுகவில் இணையும் என்று எல்.கணேசன் கூறியுள்ளார்.
திருவாரூரில் போட்டி மதிமுகவின் (எல்.ஜி.-செஞ்சி) நாகை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அவைத் தலைவர் எல்.கணேசன் தலைமை தாங்கினார்.
பின்னர் நிருபர்களிடம் கணேசன் பேசுகையில்,
திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலில் திமுக மகத்தான வெற்றி அடைய உறுதுணையாக நின்று உழைப்போம்.
மதிமுக திருமங்கலம் தொகுதியை அதிமுகவுக்கு விட்டுக்கொடுத்து கேவலத்திற்குரியது. இது மதிமுகவுக்கு ஒரு கரும்புள்ளி. மதிமுக நின்றால் தோற்றுவிடும் என்று கருதி அதிமுகவிற்கு தொகுதியை விட்டுக் கொடுத்த வைகோவை தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள். விரைவில் வைகோ கூடாரம் காலியாகும்.
போர் நிறுத்தத்துக்கு இலங்கை முன் வராவிட்டால் ராணுவ உதவிகளை திரும்ப பெறுவதுடன் இந்திய தூதரையும் திரும்ப பெற வேண்டும். ஐ.நா. சபைக்கு பிரச்சனையை கொண்டு செல்ல வேண்டும்.
வரும் பிப்ரவரி மாதம் எங்கள் கட்சி திமுகவில் இணைகிறது. இதற்கான தேதியை முதல்வர் கருணாநிதி விரைவில் அறிவிப்பார்.
சத்தியமூர்த்தி பவன் தாக்கப்பட்ட சம்பவம் கண்டனத்திற்குரியது. திருமாவளவன் தனது தொண்டர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட சீட் கேட்பேன். கருணாநிதி நிற்க சொல்லும் தொகுதியில் நிற்பேன். ஏனெனில் கடந்த எம்பி தேர்தலில் மதிமுக சார்பில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட போது, திருச்சி தொகுதியில் நிற்க உத்தரவிட்டது முதல்வர் கருணாநிதி தான்.
கடந்த சில மாதங்களாகவே போட்டி மதிமுக திமுகவில் இணையும் என்று எல்.ஜி பலமுறை கூறிவிட்டார். ஆனால் இணைப்பு விழா தேதி தான் அறிவித்தபாடு இல்லை. ஒருவேளை முதல்வர் கருணாநிதிக்கு இதில் உடன்பாடு இல்லையோ என்று மதிமுவினர் நையாண்டி செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications