தமிழக தலித் வாக்குகளை குறி வைக்கும் மாயாவதி

பகுஜன் சமாஜ் கட்சியை இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துச் செல்லும் முயற்சியில் மாயாவதி தீவிரமாக இறங்கியுள்ளார்.
உ.பியைத் தாண்டி வட மாநிலங்களில் கட்சியை பலப்படுத்திக் கொண்டிருக்கும் அவர் தற்போது தென் மாநிலங்களையும் குறி வைத்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் போட்டியிடுவதற்கு வசதியாகவும், கணிசமான அளவில் எம்.பி. சீட்களைக் கைப்பற்றுவதற்காகவும் தென் மாநிலங்களையும் தனது திட்டத்தில் முக்கியமாக சேர்த்துள்ளார் மாயாவதி.
அதன் ஒரு முயற்சியாக தென் மாநிலங்களில் உள்ள அனைத்து தலித் அமைப்புகள், சின்னம் இல்லாமல் இயங்கி வரும் சிறு சிறு கட்சிகளை தனது கட்சியுடன் இணைத்து அவர்களை பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட வைக்கும் முயற்சியை அவர் தொடங்கியுள்ளார்.
இதன் பொருட்டு தென் மாநில சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள அவர் நேற்று மாலை சென்னை வந்தார்.
தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை லோக்சபா தேர்தலுக்கு எப்படித் தயார்படுத்துவது என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் அவர் முக்கிய ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவது எனவும் மாயாவதி முடிவு செய்துள்ளார்.
சமீபத்தில் கட்சியில் இணைந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவகாமி, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சப்தரிஷி ம்றும் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராமசுப்ரமணியம் ஆகியோரை வேட்பாளர்களாக முதல் கட்டமாக அவர் முடிவு செய்துள்ளார்.
மேலும் அதிமுக எம்.எல்.ஏவும்,நடிகருமான எஸ்.வி.சேகரையும் தனது கட்சியில் இணைத்து பிராமணர்களின் வாக்குகளையும் பிரிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
தற்போது தமிழகத்தில் சக்தி வாய்ந்த தலித் கட்சியாக இருப்பது தொல். திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மட்டுமே. இன்னொரு கட்சியான புதிய தமிழகத்திற்கு தென் மாவட்டங்களில் ஓரளவு ஆதரவு உள்ளது.
இந்த இரு கட்சிகளிலும் உள்ள வாக்குகளைப் பிரித்து அவற்றை பகுஜன் சமாஜ் கட்சி பக்கம் திருப்பி விடும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.
நேற்று சென்னை வந்த மாயாவதிக்கு கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய மாயாவதி, இன்று மாலை புனித ஜார்ஜ் மேல்நிலைப்பள்ளி வளாக்தில் நடைபெறும் அனைத்து மக்களின் நண்மைக்கான சகோதரத்துவ மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகிறார்.
அப்போது தனது தமிழகத் திட்டங்களை அவர் விவரிப்பார் எனத் தெரிகிறது. மாநாட்டையொட்டி பிரமாண்ட பேரணியும் நடத்தப்படவுள்ளது.
இதைத் தொடர்ந்து அவர் கேரளாவுக்கு சென்று அங்கு பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழகத்தில் பிரிந்து கிடக்கும் தலித் சக்திகளையும், வாக்கு வங்கியையும் மாயாவதி என்ற சக்தி நிச்சயம் ஒருங்கிணைத்து தமிழக தலித்களுக்கு புதிய உற்சாகத்தையும், அங்கீகாரத்தையும் கொடுக்கும் என அக்கட்சி்த் தலைவர் ஆம்ஸ்டிராங் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து பிரிந்து பகுஜனில் இணைந்த செல்வப் பெருந்தகை ஆகியோர் நம்பிக்கை தெரிவித்துள்ளன்.












Click it and Unblock the Notifications