காங்.-திமுக உறவில் சிக்கல் இல்லை-ஜி.கே.வாசன்
சென்னை: காங்கிரஸ் கட்சிக்கும், திமுகவுக்கும் இடையிலான உறவில் எந்த சிக்கலும் இல்லை. உறவு வலுவாகவே உள்ளதாக மத்திய இணை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சத்தியமூர்த்தி பவன் மீது விடுதலைச் சிறுத்தைகள் தாக்குதல் நடத்தியதையடுத்து மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், இளங்கோவன், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, எம்பிக்கள், எம்எல்ஏக்கள் திமுக அரசை கண்டித்து அறிக்கை விட்டு வருகின்றனர். இதனால் இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவு வேகமாக சீர்குலைந்து வருகிறது.
இந் நிலையில் காஞ்சீபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம், மவுளிவாக்கம் ஊராட்சியில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு ஆதிதிராவிட நலத்துறை தொடக்கப்பள்ளி கட்டிட திறப்பு விழாவும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடந்தது.
இந்த விழாவுக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றத்தலைவர் பி.எஸ்.பழனி அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் மத்திய திட்ட அமலாக்கம் மற்றும் புள்ளியியல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு பள்ளிக்கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், மத்திய அரசும், இங்கே உள்ள மாநில அரசும் கல்விக்கு அதிக நிதியை ஒதுக்கி வருகின்றன.
மத்தியி்ல் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோரின் முயற்சியினால் இந்தியா வல்லரசாக உருவெடுத்து உள்ளது. தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் கருணாநிதியால் கல்வித்துறை முதல் இடத்தில் உள்ளது. மத்திய அரசும், மாநில அரசும் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறது.
இதனால் காங்கிரஸ்-தி.மு.க. உறவு வலுவாக உள்ளது. மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பள்ளிகட்டிடங்கள், கல்வி தளவாடங்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்றார் அவர்.












Click it and Unblock the Notifications