பதவி விலக மாட்டேன்: அந்துலே உறுதி
டெல்லி: மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரே மரணம் குறித்து அரசு தெளிவுபடுத்தி விட்டது. இதுதொடர்பாக விசாரணை தேவையில்லை. இந்த விவகாரம் தொடர்பாக நான் விலக மாட்டேன். வேண்டுமானால் எதிர்க்கட்சிகள் வந்து எனது காலில் விழட்டும் என்று மத்தி சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.ஆர்.அந்துலே கூறியுள்ளார்.
கர்கரே விவகாரம் தொடர்பாக அந்துலே எழுப்பிய சர்ச்சைக்கு முடிவு கட்டும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் லோக்சபாவில் இன்று அறிக்கை தாக்கல் செய்தார்.
அதில், கர்கரேவை கொன்றது தீவிரவாதிகள்தான். இதில் எந்த சதிச் செயலும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து லோக்சபா கூட்டத்தை முடித்து விட்டு வெளியே வந்த அந்துலேவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, உள்துறை அமைச்சரின் அறிக்கை அனைத்து சந்தேகங்களையும் தெளிவுபடுத்தி விட்டது. சபையில் ஒரு அறிக்கையை உள்துறை அமைச்சர் தாக்கல் செய்துள்ளார். அதை அனைவரும் நம்ப வேண்டும்.
ப.சிதம்பரம் தெளிவான விளக்கத்தை அளித்து விட்டதால் இந்த விவகாரம் குறித்து விசாரிக்கத் தேவையில்லை.
என்னைப் பொருத்தவரை விவகாரம் இத்துடன் முடிந்து விட்டது. எனது வேண்டுகோள் என்னவென்றால், விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது மட்டுமே. விசாரணைக்குப் பின்னரே உள்துறை அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
நான் விலகும் பேச்சுக்கே இடமில்லை. அப்படிக் கோரும் எதிர்க்கட்சியினர் எனது காலைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு கேட்கட்டும். அல்லது பிரதமரின் காலைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு அந்துலேவை நீக்குங்கள் என்று கூறட்டும்.
கர்கரே மரணம் தொடர்பாக சதி நடந்திருப்பதாக நான் ஒருபோதும் கூறவில்லை. சந்தேகம் இருப்பதாகத்தான் தெரிவித்திருந்தேன் என்றார் அந்துலே.












Click it and Unblock the Notifications