ராஜ்யசபாவில் டி.கே.ரங்கராஜனை தள்ளிவிட்ட பிரணாப்
டெல்லி: கடும் அமளிக்கிடையே, இன்சூரன்ஸ் சட்ட திருத்த மசோதா ராஜ்யசபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதித்துறை இணை அமைச்சரிடமிருந்து மசோதாவைப் பறிக்க சிபிஎம் உறுப்பினர்கள் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நிதித்துறை இணை அமைச்சர் பி.கே.பன்சால், இந்த மசோதாவை நேற்று தாக்கல் செய்ய எழுந்தார். அப்போது சிபிஎம் உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், தனது இருக்கையிலிருந்து எழுந்து அமைச்சரிடம் சென்றார். அவர் கையில் வைத்திருந்த மசோதாவைப் பறிக்க முயன்றார்.
இதைப் பார்த்து கோபமடைந்த வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ரங்கராஜனை தள்ளி விட்டார். அவர், மசோதாவைப் பறிக்க விடாமல் தடுத்து நிறுத்தினார்.
இன்னொரு அமைச்சரான மீரா குமார், தனது இருக்கையிலிருந்து எழுந்து பன்சால் அருகே தடுப்பு போல நின்று கொண்டார்.
ரங்கராஜனுக்கு ஆதரவாக புதிய தோழர்களான அதிமுக, தெலுங்கு தேசம் உறுப்பினர்களும் கோஷமிட்டனர். அனைவரும் சேர்ந்து மசோதாவைத் தாக்கல் செய்யக் கூடாது என்று கோரி கோஷமிட்டனர்.
இதனால் அவையில் அமளி நிலவியது. இதையடுத்து அவையை சிறிது நேரம் ஒத்திவைத்தார் துணைத் தலைவர் ரகுமான் கான்.
பின்னர் மீண்டும் அவை கூடியதும் அமைச்சர் பன்சால் மசோதாவை தாக்கல் செய்தார். அப்போதும் சிபிஎம் உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.
இந்த மசோதாவை கடந்த ஜூலை மாதம் கம்யூனிஸ்ட்கள் மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்ளும் வரை மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications