பாக்.கை தீவிரவாத நாடாக அறிவிக்க இந்திய அமெரிக்கர்கள் கோரிக்கை
நியூயார்க்: பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என்று கோரி நியூயார்க்கில் 200க்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்கர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடும் குளிரையும், பனியையும் பொருட்படுத்தாமல் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
12க்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்க அமைப்புகள் இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்தின. ஐ.நா. சபைக்கு வெளியே இந்த ஆர்ப்பாட்டம் நடந்துத.
நியூயார்க், நியூ ஜெர்சி, கனக்டிகட் மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர். வெளிநாடு வாழ் பாஜக நண்பர்கள், இந்திய அமெரிக்க அறிவுஜீவிகள் அமைப்பு உள்ளிட்டவை இந்த போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தின.
பயங்கரவாத செயல்களை பாகிஸ்தான் தொடர்ந்து தடுக்காமல் ஊக்குவித்து வருகிறது. எனவே பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக ஐ.நா. அறிவிக்க வேண்டும்.
பெரும்பாலான பயங்கரவாத அமைப்புகள் சவூதியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகின்றன. அங்கிருந்துதான் அவற்றுக்கு நிதியுதவி தாராளமாக கிடைக்கிறது. இங்கிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு பாகிஸ்தானில் வைத்து அவற்றை திட்டமிட்டு, செயல்படுத்துகின்றனர். எனவே சவூதி அரேபியா மீது சர்வதேச நாடுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாகிஸ்தான், சவூதி அரேபியா மீது பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும். பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. மீது கடும் நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானை நிர்ப்பந்திக்க வேண்டும்.
இந்தியா கோரும் தீவிரவாதிகளை ஒப்படைக்க பாகிஸ்தான் முன்வராவிட்டால், மனித குலத்திற்கு எதிரான குற்றச் செயல்களுக்கான சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் பாகிஸ்தானை நிறுத்தி விசாரணை நடத்த வேண்டும் என்று போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மும்பை தீவிரவாதத் தாக்குதலின்போது நாரிமன் இல்லத்தில் கொல்லப்பட்ட யூத தம்பதிகளான ரப்பி கேவ்ரியேல் ஹோல்ட்ஸ்பர்க், அவரது மனைவி ரிவ்கா ஆகியோரின் படங்களை போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
யூதர்களாக இருப்பது குற்றமா என்ற வாசகமும் அதில் இடம் பெற்றிருந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக மும்பைத் தாக்குதலில் வீர மரணம் அடைந்த பாதுகாப்புப் படையினர், உயிரிழந்த பொதுமக்கள் ஆகியோருக்கு ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications