மும்பை தாக்குதலில் பாக். தொடர்பு-உறுதிப்படுத்தும் அமெரிக்கா
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வாதங்கள் வலுவாக இருப்பதாகவும், அது கொடுத்துள்ள தகவல்கள் அனைத்தும் உண்மையானவை, வலுவானவை என அமெரிக்க புலனாய்வுத்துறை அதிகாரி ஜான் மிக்கேல் மெக்கன்னல் உறுதிப்படுத்தியுள்ளார்.
மும்பை தீவிரவாதத் தாக்குதலின்போது தீவிரவாதிகள் பயன்படுத்திய சாட்டிலைட் போன்கள், செல்போன் பேச்சுக்களை தீவிரமாக ஆய்வு செய்த எப்.பி.ஐ கொடுத்த தகவல்களின் அடிப்படையில் அமெரிக்கா, இந்தியா வழங்கிய ஆதாரங்களை ஏற்றுக் கொண்டுள்ளது.
சாட்டிலைட் போன்களில் பதிவான ஒரு தொலைபேசி எண், லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி அபு அல் காமா என்பவனுக்குச் சொந்தமானது என்று மெக்கன்னல் தெரிவித்துள்ளனர்.
அவர் கூறுகையில், பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வாதம் மிக வலுவாக உள்ளது. இந்தியாவின் கூற்றை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். முழு திருப்தி அடைந்துள்ளோம். மும்பையில் தீவிரவாதிகள் பயன்படுத்திய சாட்டிலைட் போன்களில் ஒரு எண் அபு அல் காமாவுடையது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சாட்டிலைட் போன், ஷார்ஜாவைத் தலைமையிடமாகக் கொண்ட துராயா என்ற நிறுவனத்தின் தயாரிப்பாகும். அவர்களிடம் இதுகுறித்து உறுதிப்படுத்திக் கொண்டுள்ளோம். பாகிஸ்தான் மண்ணிலிருந்துதான் இந்த போன் மூலம் அபு காமா, மும்பையில் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுடன் பேசியுள்ளான் என்றார் மெக்கன்னல்.
தற்போது லஷ்கர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரம் கிடைத்திருப்பதால் அந்த அமைப்பு மீது கடும் நடவடிக்கை எடுக்க சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுக்க அமெரிக்கா தயாராகி விட்டது.
இதற்கிடையே, மும்பைத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் ஒவ்வொரு நாளையும் அது அதி முக்கியமாக கருத வேண்டும் என பாகிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா கண்டிப்புடன் கூறியுள்ளது.
மேலும், பாரக் ஓபாமா அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள நிலையில், மும்பை போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் பாகிஸ்தானின் கடமை எனவும் திட்டவட்டமாக அமெரிக்கா தெரிவித்துள்ளதாம்.