செங்கோட்டை-புனலூர் ரயிலுக்கு கடும் கூட்டம்
தமிழ்நாடு-கேரள எல்லைபகுதியான செங்கோட்டை வழியாக கேரளா செல்லும் தேசிய நெடுஞ்சாலை எஸ்-வளைவு முதல் புனலூர் வரை மிகவும் மோசமாக சாலைகள் இருந்ததை அடுத்து அப்பகுதி மக்களின் தொடர் கோரிக்கைகளை ஏற்று கடந்த மாதம் 17ம் தேதி முதல் இப்பாதையில் சாலை புதுப்பிக்கும் பணி ரூ.26 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கடந்த 17ம் தேதி முதல் தமிழகத்தில் இருந்து கேரள மாநிலம் செல்லும் கோட்டை வாசல் பகுதியில் முழுமையாக வாகனங்கள் செல்ல முடியாத வகையில் தடுப்பு ஏற்படுத்தி அம்மாநில அரசு சாலையை புதுப்பிக்கும் பணியினை முன்அறிவிப்பின்றி தொடங்கியது.
இதனால் தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் சரக்கு வாகனங்கள், ஐயப்ப பக்தர்கள், பயணிகள் செல்ல முடியாமல் பெரும் அவதியடைந்தனர்.
பின்னர் செங்கோட்டை மேக்கரை வழியாக அச்சன்கோவில், அலிமுக்கு பாதையில் மேற்கண்ட வாகனங்கள் கேரள செல்லத் துவங்கின.
மேலும் ஆரியங்காவு, கழுதுருட்டி, தென்மலை, புனலூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பல்லாயிரக்கனக்காணோர் தமிழகம் வருவதற்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் ரயில் மூலம் தமிழகம் வரத் தொடங்கியுள்ளனர்.
தற்போது செங்கோட்டையிலிருந்து புனலூருக்கு காலை 6 மணி, 9 மணி, 11.35 மணி, 3.40 ஆகிய நேரங்களில் 4 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் அனைத்தும் கட்டுகடங்காத பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.
தென்னக ரயில்வே இத்தடத்தில் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.