நன்கொடை தராத என்ஜீனியர் கொலை- மாயாவதி கட்சி எம்.எல்.ஏ. கைது
லக்னோ: உ.பி. முதல்வர் மாயாவதியின் பிறந்த நாளுக்காக நன்கொடை தர மறுத்ததற்காக பொதுப்பணித்துறை என்ஜீனியரைக் கொலை செய்தததற்காக பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏ. சேகர் திவாரி மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மாயாவதியின் பிறந்த நாள் அடுத்த மாதம் வருகிறது. இதையொட்டி பிறந்த நாள் நிகழ்ச்சியைக் கொண்டாடவும், கட்சிக்கு நிதி சேர்க்கவும், நிதி வசூலில் தொண்டர்கள் ஈடுபட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார் மாயாவதி.
இதையடுத்து மாயாவதி கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்டோர் தீவிர நிதி வசூலில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், மாயாவதி பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு நன்கொடை தர மறுத்ததால், பொதுப்பணித்துறை என்ஜீனியர் மனோஜ் குப்தா அடித்துக் கொல்லப்பட்டார்.
உ.பி. மாநில அரசியலில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரூ. 10 முதல் 15 லட்சம் வரை குப்தா தர வேண்டும் என சேகர் திவாரி வற்புறுத்தியதாகவும், அதைத் தர அவர் மறுத்ததால்தான் தனது ஆட்களோடு சேர்ந்து குப்தாவை, திவாரி அடித்துக் கொன்றதாகவும், குப்தாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து குப்தாவின் மனைவி சசி குப்தா கூறுகையில், சிலர் வந்து எனது வீட்டுக் கதவைத் தட்டினர். நான் யார் என்று கேட்டபோது, சிஐடி போலீஸ் என்று கூறினர். இதையடுத்து எனது கணவரை எழுப்பினேன். அவரும், யார், என்ன என்று கேட்டார்.
அதற்குப் பதிலளிக்காத அவர்கள் வேகமாக கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர். உடனே எனது கணவர் எனவே பாத்ரூமில் வைத்து பூட்டி விட்டார். அப்போது உள்ளே வந்த அந்தக் கும்பல் எனது கணவரை
அடித்து உதைத்து இழுத்துச் சென்று விட்டது.
பின்னர் குப்தாவின் இறந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது. சரமாரியாக அவரை அடித்துக் கொன்றது தெரிய வந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ சேகர் திவாரி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கும், மாயாவதிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று உ.பி. மாநில அரசின் அமைச்சரவை செயலாளர் சஹாங்க் சேகர் சிங் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், முதல்வரின் பிறந்த நாள் நன்கொடை தொடர்பாக இந்த கொலை நடக்கவில்லை. முதல்வருக்கும், இதில் எந்தத் தொடர்பும் இல்லை.
எம்.எல்.ஏ சேகர் திவாரி கைது செய்யப்பட்டுள்லார். அவர் மீது ஏற்கனவே 12 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்றார்.
கட்சித் தொண்டர்களிடமிருந்து பரிசுகள், நன்கொடைகளைப் பெறுவதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளார் மாயாவதி. சில மாதங்களுக்கு முன்பு கோடிக்கணக்கான ரூபாய் கணக்கை, பரிசுப் பொருட்கள் வரிசையில் சேர்த்து வருமான வரித்துறையிடம் அவர் கணக்கு காட்டினார் என்பது நினைவிருக்கலாம்.
இன்று சமாஜ்வாடி பந்த்:
இந்த சம்பவத்தைக் கண்டித்து உ.பியில் இன்று பந்த் நடத்த சமாஜ்வாடிக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
என்ஜீனியர் கொல்லப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து உ.பி. மாநில பொறியாளர்கள் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications