பாக். விடும் கதை-கண்டுகொள்ளாத யு.எஸ். மீடியா
டெல்லி: லாகூர் குண்டுவெடிப்பில் இந்திய உளவாளி ஒருவரைக் கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் விட்டுள்ள புதுக் கதையை, அமெரிக்க மீடியாக்கள் கண்டுகொள்ளவில்லை. முன்னணி செய்தி நிறுவனங்கள் அது குறித்த செய்தியையே வெளியிடவில்லை.
லாகூர் கார் குண்டுவெடிப்பு தொடர்பாக கொல்கத்தாவைச் சேர்ந்த சதீஷ் ஆனந்த் சுக்லா என்பவரைக் கைது செய்துள்ளதாகவும், அவர் ஒரு இந்திய உளவாளி என்றும் பாகிஸ்தான் புதுக் கதை விட்டுள்ளது.
ஆனால் இந்தியா இதை கடுமையாக கண்டித்து மறுத்துள்ளது. இந்த நிலையில் சர்வதேச அளவில் முன்னணி செய்தி நிறுவனங்களான சி.என்.என், நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் ஆகியவை இதுகுறித்து செய்தியையே போடவில்லை. பாகிஸ்தானின் கூற்றை அவை ஒதுக்கித் தள்ளி விட்டன.
மும்பை சம்பவம் தொடர்பாக இந்தியாவிடம் வலுவான ஆதாரங்கள் சிக்கியுள்ள நிலையில்,அதிலிருந்து உலக நாடுகளை திசை திருப்ப பாகிஸ்தான் இந்த புனை சுருட்டை வெளியிட்டுள்ளதாக பொதுவான கருத்து நிலவுகிறது.
எனவேதான் பாகிஸ்தானின் இந்தப் புதிய புகாரை, அமெரிக்க மீடியாக்கள் புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது.
பாக். புகார் சிறுபிள்ளைத்தனமானது-இந்தியா:
இதற்கிடையே லாகூரில் நடந்த குண்டுவெடிப்புக்கு இந்திய தூதரக ஊழியர் சதீஷ் ஆனந்த் சுக்லா என்பவர்தான் காரணம் என பாகிஸ்தான் கூறியிருப்பது சிறுபிள்ளைத்தனமானது என்று இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பாகிஸ்தானின் பேச்சு சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. சதீஷ் ஆனந்த் சுக்லா என்ற பெயரில் எந்த இந்தியத் தூதரகத்திலும் யாரும் பணியாற்றவில்லை. இது தேவையில்லாத, திசை திருப்பும் செயலாகும் என்றார்.
இதற்கிடையே, சுக்லா கைது குறித்து எந்தத் தகவலும் தங்களுக்கு வரவில்லை என்று இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தூதரக அதிகாரி ஒருவர் கூறுகையில், பாகிஸ்தான் நிர்வாகத்திலிருந்து இந்தக் கைது குறித்து எந்தத் தகவலும் இல்லை. இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக எங்களுக்கு யாரும் எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. பத்திரிக்கைகள், டிவி செய்திகளைப் பார்த்துதான் நாங்களே தெரிந்து கொண்டோம் என்றார்.












Click it and Unblock the Notifications