புலிகளை ஆதரித்தால் நடவடிக்கை-கருணாநிதி
சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் இன்று விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் சார்பில் தமிழ் ஈழ அங்கீகார மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான விஷயங்கள் இடம் பெறக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மாநாட்டில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சுப. வீரபாண்டியன், காசி ஆனந்தன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந் நிலையில் முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:
கேள்வி: இலங்கை தமிழர் பிரச்சினையில் திமுக விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறதா?
பதில்: இலங்கை தமிழர் பாதுகாப்புதான் திமுகவின் குறிக்கோள். இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரிப்போரை திமுக ஆதரிக்கவில்லை. அவ்வாறு ஆதரித்து பேசினாலும், செயல்பட்டாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க திமுக ஆட்சி தயக்கம் காட்டாது. இந்த எச்சரிக்கை எல்லோருக்கும் பொருந்தும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் விவகாரத்தில் காங்கிரஸ்- விடுதலைச் சிறுத்தைகள் இடையே மோதல் ஏற்பட்டு சத்தியமூர்த்தி பவன் தாக்கப்பட்டதும், இதையடுத்து திருமாவளவனையும் திமுக அரசையும் கண்டித்து காங்கிரசார் போராட்டம் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் தான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார் முதல்வர் கருணாநிதி.












Click it and Unblock the Notifications