பஞ்சாப், எல்ஓசியில் குவியும் பாக் படைகள்!

பாகிஸ்தான் அட்டாரி பகுதியில் மட்டும் 5,000 ராணுவத்தினர் கொண்ட 10வது பிரிவை நிறுத்தியுள்ளது பாகிஸ்தான். அதேபோல, 34வது படைப்பிரிவை, இந்தியாவின் பஞ்சாப், ஜம்மு பகுதிகளில் நிறுத்தியுள்ளது.
ஜெய்சால்மர், பார்மர் மற்றும் கங்கா நகர் எல்லைகளை ஒட்டுயுள்ள தங்கள் நாட்டுப் பகுதியில் பங்கர்களைத் தோண்டிய வண்ணம் உள்ளனர் பாகிஸ்தான் படையினர்.
கடந்த சில நாட்களாக இஸ்லாமாபாத், லாகூர், ராவல்பிண்டி ஆகிய முக்கிய நகரங்களில் பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் வானில் பறந்து ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றன.
அதேநேரம் பாகிஸ்தான் ரணுவத்தினர் ஏற்கனெவே இருந்த சியால்கோட், ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய நிலைகளில் முழு அளவிலான போருக்குத் தயாராக நிற்பதாக இந்திய ராணுவத்தினருக்கு தகவல்கள் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இப்போதுள்ள சூழலில் போர் என்று ஆரம்பித்தால் இந்தியாவில் முதல் பாதிப்பு பஞ்சாப் மாநிலத்துக்குத்தான். காரணம் இந்த நாட்டின் 553 கிலோ மீட்டர் நீளத்துக்கு பாகிஸ்தான் எல்லை வருகிறது. எனவே இந்த எல்லைப் பகுதியை முழுவதுமாக பாதுகாப்பது முக்கியம்.
எனவே இந்தியாவும் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் கணிசமான வீரர்களை நிறுத்தியுள்ளது.
எல்ஓசியிலும் பாக் படைகள் குவிப்பு!:
காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் முக்கியப் பகுதிகளிலும் பாகிஸ்தான் படைகள் பெருமளவு குவிக்கப்பட்டு வருவதாக ராய்டர் நிறுவனம் தெரிவிக்கிறது. இதனை அமெரிக்க உளவுப் பிரிவும் இந்திய உளவுத் துறையும் உறுதிப்படுத்தியுள்ளன.
இதைத் தவிர, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முக்கிய நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் பாகிஸ்தான் படைகள் கணிசமாக நிறுத்தப்பட்டுள்ளன.
வீரர்கள் விடுமுறை ரத்து:
பாகிஸ்தானில் உள்ள சாஷ்மா மின் உற்பத்தி நிலையம் மீது இந்தியா தாக்குதல் நடத்தக்கூடும் என்று பாகிஸ்தானுக்கு பீதி ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த நிலையத்தின் மீதும், இதர முக்கிய இடங்கள் மீதும் பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் ரோந்து சுற்றி கண்காணித்து வருகின்றன.
ராணுவத்தினர் அனைவரது விடுமுறையையும் பாகிஸ்தான் ராணுவம் ரத்து செய்துள்ளது. அவர்களை உடனே பணிக்கு திரும்புமாறு உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம்!:
இதற்கிடையே, போர் மூண்டால் அணு ஆயுதங்களை நாங்களாக முதலில் பயன்படுத்த மாட்டோம் என்று பாகிஸ்தான் அதிபர் சர்தாரி ஏற்கனவே அளித்த உறுதிமொழியை அந்நாட்டு ராணுவ மந்திரி சவுத்ரி அகமது முக்தார் ஆதரித்துள்ளார். அணு ஆயுதங்களை பயன்படுத்துவது, இரு நாட்டுக்குமே நல்லது அல்ல என்று அவர் கூறினார்.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், முசாபராபாத் ஆகிய நகரங்களில் பாகிஸ்தான் பாதுகாப்பு பேரணிகள் நடைபெற்றன. மாணவர்கள் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் நடைபெற்ற இந்த பேரணியில் அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.












Click it and Unblock the Notifications