பாகிஸ்தானுக்கு கெடு விதிக்கவில்லை-பிரணாப்
கொடர்மா (ஜார்க்கண்ட்): தீவிரவாதிகளுக்கு எதிராகவும், தீவிரவாத முகாம்களை ஒழிப்பது தொடர்பாகவும் பாகிஸ்தானுக்கு இந்தியா எந்த காலக் கெடுவையும் விதிக்கவில்லை என்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் கொடர்மா நகரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தீவிரவாதிகளின் செயல்பாடுகளையும், தீவிரவாத முகாம்களையும் ஒழிப்போம் என பாகிஸ்தான் நமக்கு உறுதியளித்துள்ளது. அதை அது செய்ய வேண்டும்.
பாகிஸ்தான் மண்ணில் செயல்படும் அனைத்து தீவிரவாத முகாம்களையும் அது அழிக்க வேண்டும். தனது மண்ணை தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்த பாகிஸ்தான் அனுமதிக்கக் கூடாது.
அதேசமயம், இதற்காக பாகிஸ்தானுக்கு இந்தியா எந்த காலக்கெடுவையும் விதிக்கவில்லை. அதுகுறித்த கேள்விக்கே இடமில்லை. யாரும் கெடு விதிக்கவும் முடியாது.
மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை முடிவடைந்தவுடன், பாகிஸ்தான் கோரும் தகவல்களை இந்தியா கண்டிப்பாக தரும். மும்பைத் தாக்குதலுக்குக் காரணமான தீவிரவாதிகள் பாகிஸ்தான் மண்ணிலிருந்துதான் வந்துள்ளனர். இதை அந்த நாட்டு ஒப்புக் கொள்ள வேண்டும்.
இதை அந்த நாடு செய்தாலே போதும், வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஒருமுறை அல்ல, இருமுறை இந்தியாவிடம் பாகிஸ்தான் தீவிரவாத ஒழிப்பு குறித்து உறுதியளித்திருந்தது. முன்பு முஷாரப் உறுதியளித்தார். இப்போது அதிபர் சர்தாரி உறுதிமொழி அளித்தார். ஆனால் அவை எங்கு போனது என்று தெரியவில்லை. தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ன ஆனது என்றும் தெரியவில்லை.
அதேசமயம், தீவிரவாதிகள் தொடர்பான ஆதாரங்களை ஒருமுறை அல்ல, பத்து முறை இந்தியா கொடுத்துள்ளது. மும்பை தாக்குதலுக்குக் காரணமானவர்கள் பாகிஸ்தானியர்கள்தான் என்பதை முதலில் பாகிஸ்தான் ஒத்துக் கொண்டது. பின்னர் அதை மறுத்துப் பேசுகிறது என்றார் பிரணாப் முகர்ஜி.












Click it and Unblock the Notifications