டெல்லியில் கடும் பனிமூட்டம்: விமான-ரயில் போக்குவரத்து பாதிப்பு

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனி நிலவுகிறது. பனிக்கும், கடும் குளிருக்கும் இதுவரை ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை டெல்லியில் கடும் பனி மூட்டம் நிலவியது. இதனால் ரயில் போக்குவரத்தும், விமானப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
நாட்டின் பல்வேறு நகரங்களிலிருந்தும் வர வேண்டிய விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக வந்தன. அதே நிலைதான் ரயில்களுக்கும்.
மும்பை - டெல்லி, ஹவுரா - புது டெல்லி, ராஜேந்திரா நகர் - புதுடெல்லி, புவனேஸ்வரம் - புது டெல்லி ராஜதானி ரயில்கள் பல மணி நேரம் தாமதமாக வந்து கொண்டுள்ளன.
டெல்லியை நெருங்கிய பல ரயில்கள், உள்ளே வர முடியாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
அதேபோல நீண்ட தூர ரயில்களும் பல மணி நேரம் தாமதமாக வந்து கொண்டுள்ளன. அனைத்து ரயில்களும் குறைந்தது 3 முதல் அதிகபட்சம் 5 மணி நேரம் தாமதமாக வந்து கொண்டுள்ளன.
டெல்லி நகர சாலைகளும் கூட பனி மூட்டத்தால் ஸ்தம்பித்துப் போய்க் கிடந்தன. எதிரில் வருவோர் கூட தெரியாத அளவுக்கு பனி நிலவியதால் சாலைப் போக்குவரத்தும் ஸ்தம்பித்துப் போனது.
இந்த நிலையில், மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் அகமது, டெல்லிக்கு விமானம் கிடைக்காததால் சென்னை விமான நிலையத்தில் 5 மணி நேரம் தவிக்க நேரிட்டது.
இன்று காலை 8.50 மணிக்கு கோழிக்கோட்டிலிருந்து அவர் சென்னை வந்தார். டெல்லியில் பனி மூட்டம் காரணமாக விமானங்கள் வராததால் டெல்லி செல்ல முடியாமல் சுமார் 5 மணி நேரம் சென்னை விமான நிலையத்திலேயே தவிக்க நேரிட்டது.












Click it and Unblock the Notifications