தூத்துக்குடியில் துப்பாக்கிகளுடன் 4 பேர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கள்ளத் துப்பாக்கிகளுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் சிலர் ரகசியமாக துப்பாக்கிகளை விற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையிலான போலீசார் தூத்துக்குடி கிருஷ்ணாபுரம் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள கருப்பட்டி சொசைட்டி அருகே பதுங்கியிருந்த வாலிபரை கைது செய்து ஒரு துப்பாக்கியை கைப்பற்றினர். விசாரணையில் அவர் தூத்துக்குடி தெர்மல் நகரை சேர்ந்த முத்துசாமியின் மகன் சரவணக்குமார் என்பதும், தற்போது அவர் சென்னையிலுள்ள வண்டலூரில் உள்ள லாரி செட்டில் மேலாளராக பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது.
சரவணக்குமார் கொடுத்த தகவலின் பேரில் முத்துகிருஷ்ணபுரத்தில் லாரி ஷெட் வைத்துள்ள வடிவேல் மகன் மாயாண்டி என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு கைதுப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்திய போலீசார் தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற இந்திரா நகரை சேர்ந்த லட்சுமணன் மகன் பழனிகுமார், கேவிகே நகரை சேர்ந்த டீக்கடை உரிமையாளர் மணிமாறன் ஆகியோரையும் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 5 நவீன ரக கை தூப்பாக்கிகளையும் 9மிமீ தோட்டாக்கள் 33ஐயும் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications