திருமங்கலத்தில் கலவரத்தைத் தூண்ட அதிமுக சதி: ஸ்டாலின்

திருமங்கலம் தேர்தல் பணி தொடர்பாக நேற்று மதுரை வந்த மு.க.ஸ்டாலின், திருமங்கலத்தில் உள்ள திமுக தேர்தல் பணிக்குழு அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் மு.க.அழகிரி உள்ளிட்டோரும் வந்தனர்.
அப்போது திமுக - அதிமுகவினர் மோதல் குறித்து அவர் கூறுகையில், தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த திமுகவினர் மீது தேவையி்ல்லாமல் அதிமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் திமுகவினரின் கார்களையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.
வாககாளர்களுக்குப் பணம் கொடுத்த சில அதிமுகவினரை திமுகவினர் கையும் களவுமாகப் பிடித்தனர். இதனால் ஆத்திரமடைந்து அதிமுகவினர் வன்முறையில் இறங்கியுள்ளனர். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளோம்.
தோற்று விடுவோமோ என்ற பயத்தில் இவ்வாறு அதிமுகவினர் நடந்து கொண்டுள்ளனர். மேலும், கலவரத்தைத் தூண்டி தேர்தலை நிறுத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
திமுகவினர் குறித்து பொய்ப் பிரசாரத்திலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் ஆளும் திமுக அதற்கு இடம் தராமல், தேர்தல் விதிமுறைகளின்படி அமைதியான முறையில் தேர்தல் நடக்க விரும்புகிறது.
மு.க.அழகிரி தலைமையில் திமுகவினர் சிறப்பான முறையில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
வருகிற ஜனவரி 5ம் தேதி வேட்பாளர் லதா அதியமானை ஆதரித்து திமுக கூட்டணித் தலைவர்களின் பிரசாரக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, அமைச்சர் அன்பழகன் உள்ளிட்டோர் பேசவுள்ளனர்.
1, 2 ஆகிய தேதிகளில் நடிகர் சந்திரசேகரும், 3,4 ஆகிய தேதிகளில் பாக்யராஜும், 6,7 தேதிகளில் நெப்போலியனும், பிரசாரம் செய்யவுள்ளனர்.
2ம் தேதி முதல் கிராமம் கிராமமாக நான் பிரசாரம் செய்யவுள்ளேன் என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications