திருமங்கலம்-அதிமுகவினரை கடத்த திமுக சதி: ஜெ
சென்னை: திருமங்கலம் இடைத் தேர்தல் நியாயமாக நடக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் விரும்பினால் அங்கு துணை ராணுவத்தினரை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொகுதியில் பல்வேறு இடங்களில் அதிமுகவினரின் 35க்கும் மேற்பட்ட வாகனங்களை, திமுகவைச் சேர்ந்த மிசா பாண்டியன், மன்னன், எஸ்ஸார் கோபி ஆகியோர் தலைமையில் மிகப் பெரிய ரெளடிக் கும்பல் வழிமறித்து, வாகனங்களில் இருந்தவர்களை பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளது.
இந்தத் தாக்குதலில் அதிமுக ஈரோடு மாவட்ட செயலாளர் கே.எஸ்.பழனிச்சாமி, தேனி மாவட்டம் சின்னமனூர் நகர கழக செயலாளர் வேதநாயகம், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த செங்கம் ஒன்றிய பேரவை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைமை கழக பேச்சாளர் வெங்கட்ராமன், கழக உறுப்பினர்கள் சங்கர், வெள்ளைக்கண்ணு, வேலூர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக உறுப்பினர் சிவகுமார், தூத்துக்குடி மாவட்ட கழக உறுப்பினர் ரவி ஆகியோர் பலத்த காயமடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்ட கழகச் செயலாளர் கே.சி. வீரமணியையும் திமுகவினர் தாக்கியுள்ளனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பியுள்ளார்.
இதுதவிர, அதிமுக தேர்தல் அலுவலகமும் தாக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், திருமங்கலம் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் கழக உடன்பிறப்புகளை திமுகவினர் கடத்திச் செல்ல முயற்சிப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
மேலும், கழக வேட்பாளரே தாக்கப்படலாம் என்ற அளவில் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.
திருமங்கலம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறவும், மக்கள் விருப்பு வெறுப்பின்றி வாக்களிக்க ஏதுவாகவும், இந்திய தேர்தல் ஆணையம் கூடுதலாக நேர்மையான கண்காணிப்பாளர்களை நியமிக்கவும், துணை ராணுவத்தினரை ஈடுபடுத்தவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
அதிமுகவுக்கு பிற்படுத்தப்பட்டோர் பேரவை ஆதரவு:
இதற்கிடையே அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவை
பொதுச் செயலாளர் வீர. வன்னியராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பெரும்பான்மை சமூகமாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவால் தான் பாதுகாக்க முடியும், தமிழகத்தில் தொடர்ந்து சமூக நீதிக்காக குரல் கொடுத்து வரும்ற ஜெயலலிதா நிறுத்தியுள்ள வேட்பாளரின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் பிற்படுத்தப்பட்ட மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
திருமங்கலம் இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரான முத்துராமலிங்கத்தை வெற்றி பெற அயராது உழைத்திடுவோம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications