ராமேஸ்வரம் கோவிலில் பிரதீபா பாட்டீல் குடும்பத்துடன் வழிபாடு
ராமேஸ்வரம்: குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தனது குடும்பத்தினருடன் ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோவிலில் வழிபட்டார். இதையொட்டி ராமேஸ்வரத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், தனது கணவர் தேவி சிங் ஷெகாவத் மற்றும் குடும்பத்தினருடன் நேற்று ராமேஸ்வரம் வருகை தந்தார்.
டெல்லியிலிருந்து மதுரைக்கு விமானம் மூலம் வந்த அவர்கள், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் வந்தடைந்தனர். அவர்களுடன் தமிழக அமைச்சர் சுப. தங்கவேலனும் உடன் வந்தார்.
அவர்களை ஐஜி சஞ்சீவ் குமார், டிஐஜி அமரேஷ் பூஜாரி, மாவட்ட ஆட்சித் தலைவர் கிர்லோஷ்குமார், எஸ்.பிக்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர் குடியரசுத் தலைவரும், அவரது குடும்பத்தினரும் ராமநாதசுவாமி கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கோவிலில் தலைமை குருக்கள் விட்டல் பார்வே பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றார்.
குடியரசுத் தலைவருக்கு கோவில் யானை மாலை போட்டு வரவேற்றது.
பின்னர் கோவிலுக்குள் சென்று குடியரசுத் தலைவரும், குடும்பத்தினரும் வழிபட்டனர்.
கோவில் செயல் அதிகாரி இளங்கோவன், அறங்காவலர் குழுத் தலைவர் பானுமதி நாச்சியார் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
கோவில் வரலாற்றை பார்வே, குடியரசுத் தலைவருக்கு விளக்கிக் கூறினார். 23 தீர்த்தங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்த நீர், வெள்ளிக் குடங்கள் மூலம் குடியரசுத் தலைவர், அவரது குடும்பத்தினர் மீது தெளிக்கப்பட்டது.
பின்னர் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த 3ம் பிரகாரத்தை குடியரசுத் தலைவரும், குடும்பத்தினரும் பார்வையிட்டனர்.
பிறகு கோவில் பார்வையாளர் புத்தகத்தில் குடியரசுத் தலைவர் தனது கருத்துக்களை எழுதினார். அதன் பின்னர் அனைவரும் கிளம்பினர்.
குடியரசுத் தலைவர் வருகையையொட்டி ராமேஸ்வரத்தில் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 1000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
குடியரசுத் தலைவர் வருகையையொட்டி நேற்று காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும், மீனவர்கள் கடலுக்குள் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications