பெண் கொலை-தலை, கை, கால், உடல், துண்டு துண்டுடாய்
கிருஷ்ணகிரி: இளம் பெண்ணைக் கொலை செய்து அவரது தலை, கை, கால்களை துண்டு, துண்டாக வெட்டி உடல் உறுப்புகளை பிளாஸ்டிக் பைகளில் தனித்தனியாக கட்டி கொலையாளிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வீசி சென்றுள்ளனர். கொலையான பெண் பெங்களூரைச் சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த மத்தூர் அருகே கால்வாயில் ரத்தக்கறையுடன் ஒரு பிளாஸ்டிக் பை மிதந்தது. தகவல் அறிந்த போலீசார் பிளாஸ்டிக் பையை பிரித்து பார்த்தபோது அதில் நிர்வாண நிலையில் ஒரு இளம்பெண்ணின் உடல் பகுதி மட்டும் இருந்தது.
தலை, கை, கால்கள் இல்லை. உடல் பகுதியிலும் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தன. மேலும், அந்த பையில் முழங்காலுக்கும், கணுக்காலுக்கும் இடையிலான கால் எலும்பும், ஒரு நீல நிற ஜீன்ஸ் பேண்ட்டும் இருந்தன.
25 வயது மதிக்கத்தக்க அந்த பெண் யார் என்று தெரியவில்லை.
ஜீன்ஸ் பேண்ட்டில் கைப்பற்றப்பட்ட ஒரு கார் பார்க்கிங் துண்டுச்சீட்டில் பீஃப் ஸ்டால் ரோடு' என்று கன்னடத்தில் எழுதப்பட்டுள்ளது. எனவே, அந்த பெண் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவராக, குறிப்பாக பெங்களூரைச் சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பர்கூர் அருகே இடது கை, விரல்கள்!:
இந் நிலையில் கிருஷ்ணகிரி-புதுச்சேரி நெடுஞ்சாலையில் பர்கூர் அருகே திருவண்ணாமலை ரோட்டின் ஓரத்தில் இன்னொரு பிளாஸ்டிக் பை கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதில் ஒரு பெண்ணின் இடதுகை 5 துண்டுகளாக வெட்டப்பட்டுக் கிடந்தது. கை விரலில் ஒரு தங்க மோதிரம் இருந்தது. விசாரணையில் மத்தூர் அருகே தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் கைதான் என்று தெரியவந்துள்ளது.
மேல்மலையனூர் அருகே இடுப்பு!:
இதற்கிடையே இந்தப் பெண்ணின் துண்டிக்கப்பட்ட இடுப்புபகுதி ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றி மேல்மலையனூர் அருகே நாரணமங்கலம் கிராமத்தில் சாலையில் கிடந்தது.
இந்த இடுப்பு பகுதியை கொண்டு வந்ததாகக் கருதப்படும் சூட்கேஸ் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் கிடந்தது.
இந்த மகா கொடூரமான கொலையில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இறந்த பெண்ணின் அடையாளம் தெரிந்து விடக்கூடாது என்பற்காக உடல் பாகங்களை தனித்தனியாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் கட்டி காரில் சென்றபடியே வழியெங்கும் வீசிச் சென்றுள்ளனர்.
இன்னும் தலை கிடைக்கவில்லை?:
இந்த பெண்ணின் தலை பகுதி கிடைத்தால் மட்டுமே அவர் யார் என்று அடையாளம் காண முடியும். இதனால் தலை மற்றும் கால் பகுதிகளை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications