நச்சுப்பாம்பு கடித்தும்.. உயிரை கையில் பிடித்துக்கொண்டு பிளாஸ்டிக் டப்பாவுடன் ஆஸ்பத்திரி ஓடிய பெண்
சென்னை: ஒடிசா மாநிலத்தில் பாம்பு கடித்த பெண் ஒருவர், தன்னை கடித்த பாம்பை பிளாஸ்டிக் டப்பாவில் உயிருடன் அடைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. நள்ளிரவு நேரத்தில் பாம்பு கடித்ததுமே அந்த பெண் செய்த காரியம்தான், இப்போது சோஷியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. என்ன நடந்தது ஒரிசாவில்? யாரிந்த பெண்?
ஒடிசா மாநிலம் மால்காங்கிரி மாவட்டம் குரும்பாலி கிராமத்தை சேர்ந்த பழங்குடியின பெண்மணி மணிமா நாயக். இவருக்கு 38 வயதாகிறது.. கடந்த புதன்கிழமை இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென காலில் ஏதோ ஒன்று பலமாக கடித்துள்ளது.. இதனால் சுருக்கென வலியால், பதறியடித்து எழுந்துள்ளார் மணிமா..

கடித்த நச்சுப்பாம்பு
அப்போதுதான் அங்கிருந்த நச்சுப்பாம்பை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.. அந்த பாம்பு அருகிலிருந்த அறைக்குள் புகுந்தது.. நிறைய பாத்திரங்கள் வைக்கப்பட்டிருந்தால், அதற்குள் புகுந்து மறைந்து கொண்டது..
பொதுவாக பாம்பு கடித்தால் யாராக இருந்தாலும் பயமும், பதற்றமும் ஏற்படும்.. ஆனால் மணிமா நாயக் கொஞ்சமும் டென்ஷன் ஆகவில்லை.. எப்படியும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றாக வேண்டும், அங்கே தரும் டாக்டர்களுக்கு பாம்பின் இனம் தெரிய வேண்டும் என்று நினைத்தார் மணிமா.
இதற்காக பாத்திரங்களுக்குள் ஒளிந்திருந்த அந்தப் பாம்பை லாவகமாக பிடித்தார்.. வீட்டில் இருந்த ஒரு பிளாஸ்டிக் பிஸ்கட் டப்பாவிற்குள் அந்த பாம்பை உயிருடன் போட்டு மூடினார்.
அதற்கு பிறகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தன்னுடைய குடும்பத்தினரை எழுப்பி விவரத்தை சொல்லி உள்ளார் இதைக்கேட்டு ஆடிப்போன குடும்பத்தினர், மணிமா நாயக்கையும், அவர் கையில் வைத்திருந்த பிஸ்கட் டப்பாவையும் எடுத்துக் கொண்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு விரைந்தார்கள்.
பிஸ்கட் டப்பாவுக்குள் பாம்பு
மருத்துவமனைக்குள் நுழைந்ததுமே சென்ற மணிமா, தனக்கு பாம்பு கடித்துவிட்டதாக சொல்லிவிட்டு, உடனே கையில் வைத்திருந்த இருந்த பிளாஸ்டிக் பிஸ்கட் டப்பாவை டாக்டர்களிடம் காட்டியுள்ளார். அதற்குள் உயிருடன் பாம்பு நெளிவதை பார்த்து டாக்டர்களும், நர்ஸ்களும் அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.
எனினும் அந்த பாம்பை உற்றுநோக்கி, அது என்ன இனம் என்பதையும் டாக்டர்கள் அடையாளம் கண்டுகொண்டனர். பாம்பின் இனம் தெரிந்ததால், உடனே அதற்குரிய சரியான எதிர்விஷ மருந்தை மணிமாவுக்கு செலுத்தி, சிகிச்சையை ஆரம்பித்தனர்..
மணிமாவுக்கு பாராட்டு
மணிமாவின் இந்த சாதுரியமான செயலால்தான், சரியான நேரத்தில், சரியான சிகிச்சையை தர முடிந்துள்ளது.. இப்போது மணிலா ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டாராம். தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த செய்திதான் இணையத்தில் வெளியாகிப் பெரும் வைரலாகி வருகிறது. ஆபத்தான நெருக்கடி சூழலிலும் சமயோசிதமாக செயல்பட்ட மணிமாவின் தைரியத்தை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
நிபுணர்கள் அலர்ட்
அதேசமயம், வனவிலங்கு ஆர்வலர்களும் மருத்துவ நிபுணர்களும் பொதுமக்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
பாம்பு கடித்தவுடன் அதை மீண்டும் பிடிக்க முயற்சிப்பது மிகவும் ஆபத்தானது, பதற்றத்தில் அது மீண்டும் கடித்தால் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும்.. பாம்பு கடித்தால் பதற்றமடையாமல், பாதுகாப்பான தூரத்திலிருந்து அதை ஒரு போட்டோ எடுப்பது அல்லது அதன் தோற்றத்தை நினைவில் வைத்துக் கொண்டு, உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வதே பாதுகாப்பானது என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.












Click it and Unblock the Notifications