குருவின் மறைவால் நிலைகுலைந்த சீடர்.. பாக்யராஜின் இல்லத்தில் தவிப்புடன் நின்ற இயக்குநர் பாண்டியராஜன்!
சென்னை: தனது குரு பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக மறைந்த தகவல் அறிந்து, அவரின் சிஷ்யரான பாண்டியராஜன் உடனடியாக அவரின் வீட்டின் முன் வந்து தவிப்புடன் நின்ற காட்சிகள் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பாக்யராஜ் சம்பாதித்த சொத்து இதுதான் என்று பதிவிட்டு வருகின்றனர்.
'திரைக்கதை மன்னன்' இயக்குநர் கே.பாக்யராஜின் திடீர் மறைவு ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று அதிகாலை ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் காலமான செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே, திரையுலகினரும் ரசிகர்களும் அவரது சென்னை இல்லத்திற்கு விரைந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில், பாக்யராஜின் சீடரும், இயக்குநருமான பாண்டியராஜன், தனது குருவின் மறைவுச் செய்தி கேட்டு பதறியடித்துக்கொண்டு ஓடிவந்த காட்சிகள் அங்கிருந்த அனைவரையும் கண்ணீரில் நனைய வைத்துள்ளது. செய்தி அறிந்த அடுத்த கணமே பாக்யராஜின் வீட்டிற்கு வந்த இயக்குநர் பாண்டியராஜன், உள்ளே செல்லக் கூடத் தோன்றாமல் வாசலிலேயே கைகூப்பியபடி, பெரும் தவிப்புடன் நின்றார்.
பாக்யராஜ் உடல் வீட்டிற்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பாகவே பாண்டியராஜன் அங்கு வந்துவிட்டார். தன் திரையுலக வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த குருநாதர், இனி இல்லை என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவர் நிலைகுலையும் காட்சிகள் அங்கிருந்த ஊடக கேமராக்களில் பதிவாகின.
தமிழ் சினிமாவில் பாரதிராஜா - பாக்யராஜ் கூட்டணி எப்படி ஒரு சகாப்தமோ, அதேபோல பாக்யராஜ் - பாண்டியராஜன் கூட்டணியும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கது. பாக்யராஜிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்து, அவரது பெரும்பாலான ஹிட் படங்களின் திரைக்கதை உருவாக்கத்தில் பாண்டியராஜன் முக்கியப் பங்காற்றினார்.
பின்னர், பாக்யராஜின் ஆசியோடு திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் பாண்டியராஜன். பாக்யராஜின் பாணியான நடுத்தர வர்க்க நகைச்சுவை மற்றும் எதார்த்தமான திரைக்கதையை அப்படியே தன் படங்களிலும் கையாண்டு, குருவுக்குப் பெருமை சேர்த்தவர். பாக்யராஜ் எப்படி ஹீரோ என்ற இலக்கணத்திற்குள் அடங்காமல் தனது திரைக்கதை யுக்தியால் தமிழ் சினிமாவில் ஜொலித்தாரோ, அதேபோல் அவரின் சிஷ்யர்களான பாண்டியராஜன், பார்த்திபன், லிவிங்ஸ்டன் ஆகியோரும் தங்களின் திரைக்கதையால் உச்சத்தை எட்டினர்.
அண்மையில் கூட நான் தமிழ் சினிமாவில் சாதித்ததற்கும், இப்போது அனைவரும் மரியாதை கொடுப்பதற்கு காரணமே பாக்யராஜ் தான் என்று பாண்டியராஜன் கூறி இருந்தார். அதுமட்டுமல்லாமல் பாரதிராஜாவை எப்படி பாக்யராஜ் பெயர் சொல்லாமல், எங்க டைரக்டர் என்று அழைப்பாரோ, அதேபோல் பாக்யராஜையும் அவரின் சிஷ்யர்கள் எங்க டைரக்டர் என்றே சொல்வார்கள்.












Click it and Unblock the Notifications