ராமராஜன் கார் தாக்குதல்-30 திமுகவினர் மீது வழக்கு
மதுரை: திருமங்கலம் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்யச் சென்ற நடிகர் ராமராஜனின் கார் தாக்கப்பட்ட விவகாரத்தில் 30 'அடையாளம் தெரியாத' திமுகவினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கூடக்கோவில் பகுதியில் அவர் பிரசாரம் செய்துவிட்டு வந்தபோது அவரது காரை திமுகவினர் வழி மறித்து கல்வீசித் தாக்கினர். அவரது காரை பின்தொடர்ந்து வந்த அதிமுகவினரின் கார்களும் கல்வீ்ச்சில் சிக்கின.
இதில் மருங்காபுரியைச் சேர்ந்த சின்னச்சாமி என்ற அதிமுக தொண்டர் படுகாயமடைந்தார். இதையடுத்து காரை நிறுத்திய அவரை ஒரு கும்பல் சுற்றி வளைத்து அவரை வைத்திருந்த ரூ.40,000, அணிந்திருந்த தங்க செயின், செல்போன் ஆகியவற்றை பறித்துச் சென்றுவிட்டனர்.
இது தொடர்பாக அவர் கூடக்கோவில் போலீசில் புகார் கொடுத்தார்.
அதில் திமுகவைச் சேர்ந்த அடையாளம் தெரியாத 30 பேர் தன்னை தாக்கியாதக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து புகாரை பதிவு செய்த போலீசார் 'அடையாளம் தெரியாத' அந்த 30 திமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தேர்தல் புறக்கணிப்பு போஸ்டரால் பரபரப்பு:
இதற்கிடையே தொகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி இடைத்தேர்தலை புறக்கணிக்கப் போவதாக போஸ்டர்கள் முளைத்துள்ளன.
பயோனியர் காலனி என்ற இடத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி ஏராளமான மனு செய்தும் இது வரை எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் தேர்தலை புறக்கணிக்கிறோம்- இப்படிக்கு திருமங்கலம் நகர் நல விழிப்புணர்வு சங்கம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் தொழிலாளர் பாதுகாப்பு பேரவை மற்றும் சமூகநீதி கூட்டமைப்பு என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications