தொழிற்சாலை மின்வெட்டு-அரசு பலே பல்டி!
இந்திய தொழிற்சாலைகள் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.), தமிழகத்தில் உள்ள பெரிய மற்றும் சிறிய தொழில் அதிபர்கள் ஆகியோருடன் தமிழக மின்சார நிலைமை மற்றும் மேம்பாட்டுப்பணிகள் தொடர்பாக ஆலோசனை கூட்டத்தை கடந்த 29ம்ந் தேதி அரசு நடத்தியது.
இந்த கூட்டத்தில், மின்வினியோக பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. தொழிற்சாலைகள் அமைப்பினரும் தங்கள் கோரிக்கைகளை எடுத்து வைத்தனர்,
இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டில் உயர்அழுத்த ஆலைகளில் தற்போது அமலில் உள்ள 40 சதவீத மின்வெட்டை 30 சதவீதமாக குறைப்பது, சிறு தொழில்களுக்கு 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மின்வெட்டை குறைப்பது; பெரிய தொழிற்சாலைகள் வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை அளித்து, 5 நாட்கள் மட்டும் இயங்கினால் அவர்களுக்கான 40 சதவீத மின்சார வெட்டை முழுமையாக ரத்து செய்வது என்ற 2 ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆற்காடு வீராசாமி, வாரத்தில் 5 நாட்கள் மட்டும் இயங்கும் உயர் அழுத்த தொழிற்சாலைகளுக்கு தற்போது இருந்து வரும் (40 சதவீதம்) மின்வெட்டினை முழுமையாக ரத்து செய்வது என்ற 2-வது ஆலோசனையை பெரும்பாலானோர் ஆமோதித்துள்ளனர். அதனால் ஜன.1 முதல், உயர் அழுத்த ஆலைகளுக்கு மின்வெட்டு ரத்து செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இன்று முதல் இந்த அறிவிப்பு அமலாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதை அதை திரும்பப் பெற்றுள்ள அரசு பழைய முறையே தொடரும் என அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், வாரத்தில் 5 நாட்கள் மட்டும் இயங்கும் உயர் அழுத்த ஆலைகளுக்கு மின்வெட்டை ரத்து செய்யும் திட்டத்துக்கு தற்போது சில தொழில் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதில் அவர்களுக்கிடையே மாறுபட்ட கருத்து நிலவுகிறது.
இது தொடர்பாக நிறைய கோரிக்கைகள் வந்துள்ளன. அவற்றை பரிசீலிக்க வேண்டியுள்ளது. இதுதவிர, வரும் ஏப்ரல் மாதம் வரை மாணவர்கள் தேர்வுக்கு படிக்க வேண்டியிருக்கும் என்பதால் தொடர்ந்து இரவு நேரத்தில் மின்சாரம் தடையின்றி வழங்கவேண்டியுள்ளது.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, உயர்அழுத்த ஆலைகளுக்கு மின்வெட்டு ரத்து அறிவிப்பை எப்போது, எப்படி அமல்படுத்துவது என்பது பற்றி மறுபரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. அதுவரை, முன்பிருந்தபடியே மின்வெட்டு தொடரும் என்றார்.