தோப்புக்குள்ளே 'திருவிழா'-வைகோ: 45 லட்ச அதிமுக!
மதுரையில் இன்று மத்திய தேர்தல் துணை ஆணையர் ஜெயப்பிரகாசை, முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தளவாய்சுந்தரம், ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகிய அதிமுகவினர், மார்க்சிஸ்ட் எம்பி மோகன் சகிதம் சந்த்தார் வைகோ.
திமுகவினர் பணம் கொடுப்பதாக ஒரு புகார் மனுவை கொடுத்துவிடட்டு நிருபர்களிடம் பேசிய வைகோ,
போலீஸ் தற்போது அழகிரியின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. சென்னையில் நடந்த வாக்குச்சாவடி கைப்பற்றுதல்போல திருமங்கலத்திலும் வாக்குச் சாவடிகள் கைப்பற்ற முயற்சி நடக்கிறது.
கொலை வழக்குகளில் தொடர்புள்ள ரெளடிகளை வைத்து ஜெயலலிதாவை கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக உளவுத்துறை வெளியிட்ட தகவல் பத்திரிகைகள் மூலம் வெளியே வந்துள்ளது.
ஏற்கனவே தலா ரூ.2,000 வரை வாக்காளர்களுக்கு கொடுக்க நினைத்த திமுக இப்போது ரூ.5,000 வரை கொடுக்கவும் திட்டமிட்டுள்ளது.
திருமண மண்டபங்களில் தங்கியிருப்பதற்கு தடை விதித்ததையடுத்து தோப்புக்குள் கொட்டகை அமைத்து வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய திமுக முயன்று வருகிறது என்றார் வைகோ.
வங்கி ரசீது ஆதாரங்களுடன் திமுக புகார்:
இதையடுத்து தேர்தல் துணை ஆணையர் ஜெயப்பிரகாசை திமுக சார்பில் எம்பிக்கள் சண்முகசுந்தரம், விஜயன், பழனிச்சாமி, எம்எல்ஏ சுகவனம் ஆகியோரும் சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில்,
அதிமுகவை சேர்ந்த எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் தண்டபாணி ரூ.45 லட்சம் பணத்தை வங்கியிலிருந்து எடுத்து ஒவ்வொரு பகுதிக்கும் தலா ரூ.9 லட்சம் வீதம் பிரித்து, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து அதிமுகவுக்கு ஓட்டு கேட்டுள்ளார்.
இதை நேரில் கண்ட திமுக பொறுப்பாளர் ஜாகீர் உசேன் அவரை கையும், களவுமாக பிடிக்க சென்றபோது கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ஆனால் அவர் விட்டு சென்ற ஆவணங்களை ஜாகீர் உசேன் கைப்பற்றினார்.
அதில் தேர்தல் விதிமுறைகளை மீறி ரூ.10 லட்சத்திற்கும் மேலாக பணம் எடுத்த ரசீது உள்ளது. எனவே எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தண்டபாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
5ம் தேதி கருணாநிதி பிரச்சாரம்:
இதற்கிடையே திமுக வேட்பாளர் லதா அதியமானை ஆதரித்து முதல்வர் கருணாநிதி வரும் 5ம் தேதி இந்தத் தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
இன்று மாலை திருமங்கலம் தேவர் சிலை அருகே நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்.
தங்கபாலுவும் ...
திமுக வேட்பாளர் லதா அதியமானை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தங்கபாலு நாளை மறுநாள் முதல் 2 நாட்கள் பிரச்சாரம் செய்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் திண்டுக்கல் எம்பி சித்தனைத் தவிர வேறு யாரையும் இந்தத் தொகுதியில் பிரச்சாரத்தில் பார்க்கவே முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.