திருமங்கலம் திருமண மண்டபங்களுக்கு 'சீல்'-கரை வேட்டிகள் வெளியேற்றம்
மதுரை: திருமங்கலத்தில் திருமண மண்டபங்களில் தங்கியிருந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் அங்கிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் தங்கியிருந்த திருமண மண்டபங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
திருமங்கலத்தில் திமுக, அதிமுக, தேமுதிகவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் லாட்ஜ்களில் இடம் இல்லாததால் அங்குள்ள திருமண மண்டபங்களில் தங்கியிருந்தனர்.
இந்த மண்டபங்களை தேர்தல் அலுவலகங்களாகவும் பயன்படுத்தி வந்தனர். இங்கு தான் பணத்தை பிரித்து கவரில் போடுவது, பட்டுவாடாவுக்கு கார்களைப் பிரித்து அனுப்புவது, இரவில் தொண்டர்களுக்கு 'மருந்து', விருந்து கொடுப்பது என் எல்லா 'கண்கொள்ளா' காட்சிகளும் நடந்தன.
இந் நிலையில் மதுரை வந்து இருந்த தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வெளியூரை சேர்ந்தவர்கள் 7ம் தேதிக்கு மேல் திருமங்கலத்தில் தங்கி இருக்கக் கூடாது என்று உத்தரவிட்டார்.
மேலும் திருமண மண்டபங்களில் தங்கியிருந்த அரசியல் கட்சி பிரமுகர்களை வெளியேற்றவும், இவர்களுக்கு மண்டபத்தை வாடகைக்கு விட்டதால் அவற்றை சீல் வைக்கவும் உத்தரவிட்டார்.
இதையடுத்து திருமங்கலத்தில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களையும் இழுத்து மூடி அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர். இந்த மண்டபங்களின் சாவிகளை தேர்தல் அதிகாரியான தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.
இதை முன்பே கரை வேட்டிகள் எதிர்பார்த்ததால் பல்வேறு வீடுகளையும் வாடகைக்கு எடுத்து வைத்துள்ளனர். அவர்கள் திருமண மண்டபங்களில் இருந்து வீடுகளுக்கு மாறிவிட்டனர்.
மேலும் பல தலைவர்கள் அந்தப் பகுதியில் உள்ள கட்சியினருக்குச் சொந்தமான பெரிய பங்களாக்கள், வீடுகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.