பஸ் பயணிகளை 'உறிஞ்சும்' மூட்டைப் பூச்சிகள்!
பெங்களூர்: திருச்சியிலிருந்து பெங்களூருக்கு அரசு விரைவுப் பேருந்தில் பயணம் செய்து, மூட்டைப் பூச்சிக் கடியால் அவஸ்தைப்பட்டுப் போன மோகன் என்ற பயணி நம்மிடம் இ-மெயில் மூலம் குமுறிய கதை இது..
என் பெயர் மோகன். நான் 4ம் தேதி இரவு திருச்சியிலிருந்து தமிழக அரசு விரைவுப் பேருந்து மூலம் பெங்களூருக்குப் பயணப்பட்டேன். இரவு 9.30 மணிக்கு பஸ் பெங்களூருக்குக் கிளம்பியது.
பஸ் முழுவதும் இருக்கைகளில் யாருமே அமர முடியவில்லை. காரணம் ரத்தத்தை உறிஞ்சும் மூட்டைப் பூச்சித் தொல்லை. இதுமாதிரியான மூட்டைப் பூச்சிக் கடியை பயணிகள் யாருமே அனுபவித்திருக்க மாட்டார்கள்.
கடி பொறுக்க முடியாமல் கண்டக்டரிடம் பயணிகள் முறையிட்டபோது என்னால் எதுவும் செய்ய முடியாது என்று அவர் கூறி விட்டார்.
ஒவ்வொரு பயணியிடமிருந்தும் ரூ. 210 கட்டணமாக வசூலிக்கிறார்கள். ஆனால் மூட்டைப் பூச்சிகளோ, இலவசமாக ரத்ததைத உறிஞ்சி எடுத்து விடுகின்றன. மக்கள் பணத்தில் மஞ்சள் குளித்து வரும் அரசியல்வாதிகளும், வெட்கமே இல்லாத அதிகாரிகளும் அப்பாவி பயணிகள் குறித்து கொஞ்சமும் அக்கறைப்படுவதே இல்லை.
இதில் சோகம் என்னவென்றால், திருச்சி- பெங்களூர் பேருந்தில் ஏறி, எங்கு இறங்கினாலும், பெங்களூருக்கான முழுக் கட்டணத்தையும்தான் வசூலிக்கிறார்கள். குறைத்து வசூலிப்பதில்லை.
நாம் ஓசூரில் இறங்கினால், வேறு ஒருவரை ஏற்றிக் கொண்டு, அந்த நபரிடமும், பெங்களூருக்கான முழுக் கட்டணத்தையும் வசூலிக்கிறார்கள்.
டிக்கெட் கட்டணம்தான் இப்படி கடிக்கிறது என்றால் இலவசமாக மூட்டைப் பூச்சிக் கடியையுமா கொடுப்பது?