திருமங்கலம்-தேமுதிகவுக்கு பாஜக மறைமுக ஆதரவு
சென்னை: திருமங்கலம் இடைத் தேர்தலில் விஜய்காந்துக்கு பாஜக மறைமுக ஆதரவைத் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி 234 சட்டமன்ற தொகுதிகளிலும் மாநாடுகளை பாஜக நடத்த ஆரம்பித்துள்ளது. முதலாவது மாநாடு சென்னை மைலாப்பூர் தொகுதியில் நடந்தது. அப்போது நிருபர்களிடம் கணேசன் கூறியதாவது:
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாஜ்பாயின் சாதனைகளை முன்வைத்து பிரசாரம் செய்வோம்.
தமிழகத்தை பொறுத்தவரை, நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் பாஜக தனித்தே போட்டியிடும் (வேற வழி!). கூட்டணிக்கு யாராவது வந்தால் தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்.
தேர்தலையொட்டி அனைத்து தொகுதிகளிலும் பேரணி மற்றும் பொதுக் கூட்டங்கள் நடைபெறும். சென்னையில் அடுத்த மாதம் நடைபெறும் பேரணியில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
கன்னியாகுமரியில் நடைபெறும் பேரணியில் அத்வானி கலந்து கொள்வார்.
திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலில் பாஜகவினர் தவறாமல் வாக்களிப்பார்கள். எங்களுக்கு அரசியல்ரீதியாக காங்கிரசும், கொள்கைரீதியாக கம்யூனிஸ்டுகளும் எதிரிகள். அவர்களையும் அவர்களோடு கூட்டணி வைத்துள்ளவர்களையும் எதிர்ப்போம்.
எனவே, திருமங்கலத்தில் திமுக, அதிமுக இரு வேட்பாளர்களும் தோற்கடிக்கப்பட வேண்டும். அதற்கேற்ப அந்த இரு கட்சிகளையும் தோற்கடிக்கக் கூடிய வலிமையுள்ள வேட்பாளர் யார் என்பதைப் பார்த்து பாஜக தொண்டர்கள் வாக்களிப்பார்கள்.
பாஜக ஆதரவாளர்களின் தேர்வு தேமுதிக வேட்பாளர் உள்ட யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.
புலிகள் தோற்கவில்லை:
இலங்கையில் கிளிநொச்சியை இழந்ததால், விடுதலைப் புலிகளுக்கு பின்னடைவு என்பது உண்மை. ஆனால், அவர்கள் தோற்றுவிடவில்லை. பதுங்கி இருந்து பின்னர் தாக்குவார்கள். இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சம உரிமை என்பது பிறப்புரிமை. அதை கொடுக்க இலங்கை அரசு மறுக்கிறது.
இலங்கையில் இருந்து இதுவரை 1.5 லட்சம் தமிழர்கள் அகதிகளாக வந்துள்ளனர். இதனால், இலங்கை பிரச்சினையை உள்நாட்டு பிரச்சினையாக எடுத்துக்கொள்ள முடியாது என்றார் கணேசன்.












Click it and Unblock the Notifications