'இலங்கை': சில மத்திய அரசு அதிகாரிகள் சதி-ராமதாஸ்

நிருபர்களிடம் பேசிய அவர்,
தமிழர்கள் அனைவரும் வெட்கி தலைகுனிந்து நிற்கிறோம். இங்குள்ள தமிழர்களின் சுயமரியாதைக்கும், தன்மானத்திற்கும் மிகப்பெரிய சோதனை ஏற்பட்டு நாம் தலைகவிழ்ந்து நிற்கும் நிலை உருவாகியுள்ளது.
எனக்கு கிடைத்த தகவலின் படி இலங்கையில் போரை நிறத்த வலியுறுத்துவதற்காக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பயணிகள் தவிர வேறு யாரும் (பிரணாப் முகர்ஜி) செல்வதற்கான அறிகுறியே இல்லை.
இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி இரண்டு முறை தமிழக சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினோம்.
முதல்வர் கருணாநிதி தலைமையில் எல்லோரும் டெல்லிக்குச் சென்று பிரதமரை சந்தித்து வேண்டுகோள் விடுத்தோம். தமிழகத்தை சேர்ந்த அனைத்து எம்பிகளும் பிரதமரைச் சந்தித்து முறையிட்டனர். மனிதச் சங்கிலி நடத்தினோம், ஆயினும் மத்திய அரசு மனம் இறங்கவில்லை.
இந்த விஷயத்தில் தமிழக அரசையும், தமிழக மக்களையும் மத்திய அரசு ஒட்டு மொத்தமாக அவமானப்படுத்தி விட்டதாகத்தான் கருத வேண்டியிருக்கிறது.
இந்த விவகாரத்தில் முதல்வர் எடுக்கும் எந்த ஒரு கூட்டு முடிவையும் பாமக ஏற்கும் என்று தெரிவித்தேன். அதற்கிணங்க இப்போதும் முதல்வர் கூட்டாக ஒரு நல்ல முடிவை எடுத்து அறிவித்தால் அதை ஏற்க பாமக தயாராகவே இருக்கிறது.
எங்களைப் பொறுத்தவரை இன்னும் ஒருமாதத்தில் பாமக பொதுக்குழுவை கூட்டி உறுப்பினர்களிடம் ஜனநாயக முறையில் வாக்கெடுப்பு நடத்தி ஒரு உறுதியான முடிவை அறிவிக்க உள்ளோம்.
இலங்கையில் ஒட்டு மொத்த தமிழினமும் அழிய வேண்டும் என்று மத்திய அரசில் உள்ள சில அதிகாரிகள் செயல்படுகிறார்கள். அதற்கு மத்திய அரசும், அமைச்சர்களும் துணை போகிறார்கள். இலங்கையில் தமிழினம் அழிவதை வேடிக்கை பார்ப்பது கடும் கண்டனத்திற்குரியது.
அமெரிக்க தூதர் கூட சண்டையை நிறுத்தி சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் இலங்கை அரசு, சீனா, பாகிஸ்தான் நாடுகள் வழங்கிய ஆயுதங்கள் மற்றும் இந்தியா வழங்கிய தொழில்நுட்ப ஆலோசனைகளை வைத்துக் கொண்டு ஓர் ஆண்டாக போராடி கிளிநொச்சியை பிடித்து விட்டோம் என்கிறார்கள்.
அப்படி கிளிநொச்சியை பிடித்தப்போது யார் சரண் அடைந்தார்கள், எந்தனை பேர் சரண் அடைந்தார்கள், கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் எவ்வளவு என்பதையெல்லாம் இலங்கை அரசு கூறவில்லை.
பாழடைந்த கட்டிடத்தை பிடித்துவிட்டு புலிகளின் தலைமையகத்தை பிடித்து விட்டதாக சொல்கிறார்கள்.
இலங்கை என்றைக்குமே இந்தியாவுக்கு நட்பு நாடாக இருந்ததில்லை.
புலிகளை பொறுத்தவரை பயங்கரவாதிகளோ, தீவிரவாதிகளோ அல்ல. அவர்கள் விடுதலைப் போராளிகள்.
இதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். எனவே இப்போதாவது இலங்கையில் சண்டையை நிறுத்தி அரசியல் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றார் டாக்டர் ராமதாஸ்.
தலை குனிந்து நிற்கிறோம்-ராமதாஸ்:
முன்னதாக நேற்று திண்டுக்கல்லில் நிருபர்களிடம் பேசிய அவர்,
கிளிநொச்சியை பிடித்ததாக இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்துள்ளார். ஒரு நகரை வீழ்த்தியதை வைத்து, விடுதலை போராட்ட முடிவும் நிர்ணயம் செய்யப்படுவது இல்லை.
நகரம் வீழ்ந்தாலும் தொடர்ந்து விடுதலை போராட்டம் நடக்கும் என்பதை சரித்திரம் நமக்கு சொல்லியிருக்கிறது. கிளிநொச்சியில் சிங்கள ராணுவம் நுழைந்தாலும் 5 லட்சம் தமிழர்களின் விடுதலை போராட்டம் தொடரத்தான் செய்யும்.
சிங்களர்களை போல் தமிழர்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்படும்வரை போராட்டம் தொடரும்.
இந்த நிலையில் 7 கோடி தமிழர்கள் வசிக்கும் தமிழகத்தை உள்ளடக்கிய மத்திய அரசு என்ன செய்ய போகிறது என்பதை அறிவித்து செயல்பட போகிறது என்பதை அறிய வேண்டிய நேரம் இது.
போரை நிறுத்துங்கள் என்று இந்திய அரசு சொல்லாது என்று இந்திய மண்ணிலேயே ராஜபக்சே சொல்லிவிட்டு சென்றார். தமிழக அரசியல் தலைவர்கள் எல்லாம் அரசியல் கோமாளிகள் என்று ராணுவ தளபதி குறிப்பிட்டார். மத்திய அரசில் உள்ள குழுவினர் கூட பிரதமரிடமும், கருணையும், மனிதாபிமானமும் நிறைந்த சோனியா அம்மையாரிடமும் இந்த பிரச்சினையை சரியாக எடுத்து சொல்ல தவறி விட்டார்கள்.
இதன் பின்னர் தமிழக மக்கள், முதல்வர், அரசியல் கட்சிகள் போரை நிறுத்தும்படி கோரிக்கை வைத்தும் அது நடைபெறவில்லை. இந்த அவமானத்தால் நாங்கள் தலை குனிந்து நிற்கிறோம்.
இலங்கை எப்போதும் இந்தியாவுக்கு நட்பு நாடாக இருந்தது இல்லை. இனிமேல் இருக்க போவதும் இல்லை. இலங்கை நாடு பகை நாடுகளுக்கு தளமாக போகிறது. இந்த ஆபத்தை உணர்ந்து இந்திய அரசு அவர்களை அடக்கி வைக்க வேண்டிய தருணம் வந்து விட்டது.
இலங்கையை பொறுத்தவரை இந்திய அரசின் வெளியுறவு கொள்கை மாற்றப்பட வேண்டும் என்பது தமிழகத்தில் உள்ள 7 கோடி தமிழர்களின் விருப்பம்.
கிளிநொச்சியை அடுத்து இலங்கை படையின் மூர்க்கத்தனமான தாக்குதல் முல்லைத் தீவு மாவட்டத்திற்கு திரும்பி உள்ளது. போர் விமானம் கண்மூடித்தனமாக குண்டுகளை வீசி தாக்குவதாக இன்றும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்தியா எதுவரை காத்திருக்க போகிறது, எதுவரை அமைதியாக இருக்க போகிறது என்று தமிழக மக்களின் உள்ளங்களில் கேள்விகள் எழுந்து உள்ளன.
தமிழக அரசு என்ன செய்ய போகிறது, முதல்வர் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார். அடர்த்தியாக மக்கள் வாழும் முல்லைத் தீவு அழிந்து போகட்டும், வீடு வாசல்களை இழந்து தமிழர்கள் உணவு, மருந்து பொருட்கள் கிடைக்காமல் செத்து மடியட்டும் என்று விட்டுவிட போகிறோமா?.
தமிழர்களுக்காக என்று கூட வேண்டாம், ஒரு மனிதாபிமான அடிப்படையிலாவது மத்திய அரசு தலையிட்டு உடனடியாக போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும், முதல்வரும் இதுபற்றி உடனடியாக முடிவு எடுத்து செயல்பட வேண்டும். அவர் எடுக்கும் முடிவுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தர வேண்டும் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications