வாக்காளர்களுக்கு செல்போன் கொடுக்கிறார்கள்-விஜயகாந்த்

திருமங்கலம் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் தனபாண்டியனை ஆதரித்து அந்த கட்சியின் தலைவர் விஜயகாந்த் நேற்று 3-வது நாளாக பிரசாரம் செய்தார். அவர் செக்கானூரணி, புளியங்குளம், கொக்குளம், தேங்கல்பட்டி, சிக்கம்பட்டி, கரடிக்கல் உள்பட பல்வேறு கிராமங்களில் தனபாண்டியனுக்கு ஆதரவு திரட்டினார்.
பிரசாரத்தின்போது விஜயகாந்த் பேசுகையில், கட்சி ஆரம்பிப்பது மடம் அமைத்து, ஹரே ராமா ஹரே கிருஷ்ணா பாடுவதற்கா?', இல்லை. ஆட்சியை பிடித்து மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்குத்தான் நாங்களும் கட்சி ஆரம்பித்துள்ளோம்.
தைரியம் இருந்தால் என்னை மாதிரி கூட்டணியின்றி தனித்து போட்டியிடுங்கள். பார்ப்போம்.
திமுகவின் பின்னால் ரயில் பெட்டிகளை போல் 10 கட்சிகள் கூட்டணி உள்ளது என்று கூறினார்கள். ஆனால் தற்போது காங்கிரஸ் எனும் ஒரே பெட்டிதான் அவர்களுடன் கூட்டணியாக உள்ளது.
சேலை தருகிறார்கள்:
பொதுமக்களுக்கு பணம் கொடுத்து எனது பிரசாரத்துக்கு வரவிடாமல் சில கட்சியினர் தடுக்கிறார்கள். எவ்வளவு பணம் கொடுத்தாலும் அவர்களை விலைக்கு வாங்க முடியாது. கள்ளிக்குடியிலும் கூட மக்களை வரவிடாமல் தடுத்தனர். தற்போது திருமங்கலத்தில் சில கட்சியினர் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சேலைகளை கொடுக்கிறார்கள்.
செல்போன் தருகிறார்கள்:
செல்போன் வழங்குகிறார்கள். தோல்வி பயத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று போராடுகின்றனர்.
தேர்தலுக்காக கோடி, கோடியாக செலவழிப்பதை விட்டுவிட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூ.500 வழங்கி வந்தால் விலைவாசி ஏற்றத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கும். ஆனால் அதை விடுத்துவிட்டு காசுகளை கொட்டி வாக்காளர்களை
விலைக்கு வாங்கி வருகிறார்கள்.
காசு வாங்கி ஓட்டுப்போட்டீர்கள் என்றால் உங்கள் ஊருக்கான அடிப்படை வசதிகளை கேட்டுச்செல்லும்போது, நீங்கள் காசு வாங்கிக்கொண்டுதானே ஓட்டுப்போட்டீர்கள்' என தட்டிக்கழித்து விடுவார்கள். எனவே நீங்கள் நல்ல ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த தேமுதிகவுக்கு வாக்களியுங்கள் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications