பொங்கல் கூட்ட நெரிசல்-1000 கூடுதல் பஸ்கள்
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு 1000 சிறப்புப் பல்களை விட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
பொங்கல் பண்டிகை வந்து விட்டது. இன்னும் ஒரு வாரமே உள்ளதால் சென்னையில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் மற்றும் பிற ஊர் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
ரயில்கள் அனைத்தும் ஏற்கனவே நிரம்பி விட்டன. சிறப்பு ரயில்களிலும் கூட இடமில்லை.
கூட்டம் கட்டுக்கடங்காமல் இருப்பதால் அரசு பஸ்களை மக்கள் நாடும் நிலைமை உள்ளது. பொங்கலுக்கு முதல் இரு நாட்களுக்குத்தான் அரசு பஸ்களுக்கு கடும் கூட்டம் இருக்கும் என்பதால் அன்றைய தினங்களில் ஆயிரம் சிறப்புப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
கூட்ட நெரிசலை தவிர்க்க அரசு விரைவு போக்குவரத்து கழகம் 80 பஸ்களை இயக்குகிறது. சென்னையில் இருந்து மதுரை, கும்பகோணம், தஞ்சாவூர், திருநெல்வேலி, நாகர்கோவில் பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் விடப்படுகிறது.
13-ந்தேதி அன்று பகல் மற்றும் இரவு நேர விரைவு பஸ்களில் இடமில்லை. 11, 12 தேதிகளில் இரவு நேர பஸ்களில் பெரும்பாலான இடங்கள் முன் பதிவாகிவிட்டன. பகல் நேர பஸ் களில் மட்டும் இடம் காலியாக உள்ளது.
அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 920 பஸ்கள் தினமும் இயக்கப்படுகிறது. ஸ்பேர் பஸ்களில் இருந்து 80 பஸ்கள் மட்டும் கூடுதலாக பொங்கலுக்கு இயக்கப்படுகிறது என்று நிர்வாக இயக்குனர் சட்டநாதன் தெரிவித்தார்.
இது தவிர விழுப்புரம், கும்பகோணம், மதுரை, சேலம், கோவை போக்கு வரத்து கழகங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
விழுப்புரம் கோட்டத்தில் இருந்து 450 பஸ்கள் பொங்கல் பண்டிகைக்கு இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து திருச்சி, கடலூர், சிதம்பரம், வேலூர், சேலம், திருவண்ணாமலை, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் விடப்படுகிறது.
விழுப்புரம் கோட்ட பஸ்களுக்கு திருச்சி, கும்பகோணம், சேலம் ஆகிய நகரங்களில் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. 6 போக்கு வரத்து கழகத்தில் இருந்தும் மொத்தம் 1000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பொங்கல் கூட்ட நெரிசலை தவிர்க்க கோயம்பேடு பஸ் நிலையத்தில் முன்பதிவு நடைபெறுகிறது. விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் தவிர மற்ற போக்குவரத்து கழக பஸ்களுக்கும் அங்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். பொதுமக்கள் சிரம மின்றி பயணம் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஹைவே ரைடர்...:
இதுதவிர அரசு விரைவு பஸ்களில் "ஹை-வே ரைடர்'' என்ற பெயரில் புதிய பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பஸ்கள் திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு 12 மணி நேரத்தில் சென்றடையும்.
நெல்லை, நாகர்கோவில் உள்பட முக்கிய ஊர்களுக்கு 42 புதிய ஹைவே ரைடர்ஸ் பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
தமிழக நகரங்களிலிருந்து வெளிமாநில நகரங்களுக்கு அதிக எண்ணிக்கையில் இயக்கப்படும் இந்த பஸ்கள் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நின்று செல்லும். இதன் மூலம் பயண நேரத்தில் அதிகபட்சமாக 2 மணி நேரம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
எனினும் பஸ்சின் வேகம், கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. ஏற்கனவே இயக்கப்படும் அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களை போலவே இந்த ஹைவே ரைடர்ஸ் பஸ்களிலும் அனைத்து வசதிகளும் இருக்கும்.
ஹைவே ரைடர்ஸ் இயக்கப்படும் முக்கிய சில வழித்தடங்கள் மற்றும் பஸ்களின் எண்ணிக்கை (அடைப்புக்குறிக்குள்) விபரம்:
சென்னை - நெல்லை (தலா 2), திருவனந்தபுரம் (4), சென்னை-திருச்சி (3), சென்னை-குமரி (2), சென்னை-நாகர்கோவில் (4), நெல்லை-பெங்களூர் (2), நாகர்கோவில்-பெங்களூர் (2), பெங்களூர்-நாகர்கோவில் (4), பெங்களூர்-செங்கோட்டை (2).












Click it and Unblock the Notifications