அறுவடை நேரம் நெருங்கி விட்டது-வைகோ
திருமங்கலம்: இடைத்தேர்தல் என்ற அறுவடை நேரம் நெருங்கி விட்டது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
திருமங்கலம் தொகுதியில் 9வது நாளாக முகாமிட்டு தீவிர பிரச்சாரம் செய்து வரும் வைகோ பல்வேறு இடங்களில் பேசியதாவது:
சாதனை செய்து விட்டோம் என்று திமுகவினர் மக்களிடம் கூறுகிறார்கள். அதே வேளையில் வாக்காளர்களுக்கு செல்போன், மிக்ஸி இவற்றையெல்லாம் கொடுக்கப் போவதாக தகவலும் வருகிறது. மக்களின் வாக்கை விலை கொடுத்து வாங்க நினைக்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது, அதை அனுமதிக்க மாட்டோம்.
திமுக அமைச்சர்கள், நாங்கள் அதைச் செய்கிறோம், இதைச் செய்கிறோம் என்கிறார்கள். கடந்த 2 ஆண்டுகளில் இவர்கள் என்ன சாதனையை செய்து விட்டார்கள்?.
தாறுமாறாக ஏறிய விலைவாசி உயர்வு, தாய்மார்கள் படும் கஷ்டங்கள், மின்வெட்டு ஆகியவற்றை மறந்து விட முடியுமா?.
பணத்தாலும், அதிகாரத்தாலும் ஒரு போதும் மக்களை ஏமாற்றி விட முடியாது. தமிழகத்தில் சூழ்ந்துள்ள இருளை விலக்கி ஒளி ஏற்ற திருமங்கலம் தொகுதி மக்கள் நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும்.
ஒரு சட்டமன்ற உறுப்பினரையும், பொதுமக்களையும் தாக்க போலீசாருக்கு அதிகாரம் இல்லை. இந்த செயல் அவர்களது அதிகார துஷ்பிரயோகத்தையே காட்டுகிறது.
நெல் மணி விளைந்து பருவமடைந்த பெண்ணைப் போல் தலை குனிந்து நிற்கிறது. மாற்றான் களவாடி செல்லாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். விளைந்த கதிர்கள் நம் களத்திற்குத் தான் வர வேண்டும். இடைத்தேர்தல் என்ற அறுவடை நேரம் நெருங்கி விட்டது. நாம் விழிப்புடன் இருந்து செயல்பட்டு அதிமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் வைகோ.